Monday, March 8, 2010

தெய்வக்குற்றம்

இடம் :- பெங்களூர்
நேரம் :- நள்ளிரவு 2 மணி.
கிழமை :- வெள்ளி

எங்கோ "கியாங் கியாங் " என்று அலறிய ஒரு குழந்தையின் குரல் என்னை அதிர்ச்சியோடு எழுப்பியது. எழுந்து சுற்றும் முற்றும் பார்க்க , ஒரே கும் இருட்டு. அக்குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருக்க சிறிது தூக்க கலக்கத்திலிருந்து விடுபட்டு வெளியே வர , அக்குரல் ஒரு பூனையுடையது என்பதை எனது மூளை உரைக்க அமைதியாக மீண்டும் படுத்துக்கொண்டேன்.அருகில் இருந்த கைபேசியில் நேரத்தை நோக்க அது தனது விரலை "இரண்டு" என்று காட்டியது. எதிரே இருந்த ஜன்னலின் சிறு துவாரத்தின் வழியாக தெரு விளக்கின் கூரிய ஒளி என் கண்ணைத் தாக்கியது. அவ்வொளி என் மனதிற்குள் ஊடுருவி என் எண்ணங்களை நாகர்கோவிலில் ஒரு தெரு விளக்கின் கீழே கொண்டு சென்றது. தெரு விளக்கும் , அவ்வெளிச்சமும் எனது வாழ்வில் சில மறக்கமுடியாத மற்றும் மறக்கநினைகின்ற தருணங்களில் ஆதாரமாய் விளங்குகின்றது. அன்றொரு இரவிலும் வாழ்வின் ஒரு மறக்க நினைக்கின்ற சம்பவம் நிகழ்ந்தது
இரவு மணி 11 . நானும், நண்பன் ரங்குவும் அவனது வீட்டின் எதிரே இருக்கும் தெருவிளக்கின் அடியில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தோம் . 10 ம் வகுப்பு தமிழ் தேர்வுக்குத் ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தோம். தீடீரென்று ரங்கு "கலகல" வென சிரித்தான். நானோ அரைத் தூக்கத்தில் சுவரில் முட்டி முட்டி படித்துக்கொண்டிருந்தேன். அவனது சிரிப்பு என்னை உலுக்க அவனிடம் "லேய் ! என்னடே சிரிக்க?" என்றேன். "அது ஒண்ணுமில்ல இங்க புக்ல ஒண்ணு போட்ருக்கு" என்றான். "சிரிகிறதுக்கு தக்கன என்னடே இருக்கு" என்றேன். "அம்பேத்கர் சின்ன வயசுல தெரு விளக்குக்கு கீழ இருந்துதான் படிச்சாராம்." என்று சொல்லு மீண்டும் சிரித்தான். இதுல சிரிகிறதுக்கு ஒண்ணும் இல்லையே? " என்றேன். "அவரு தெருவிளக்கில இருந்து படிச்சாருன்கிற விஷயத்தையே நாம தெருவிளக்குக்கு கீழே இருந்து தான் படிச்சுகிட்டு இருக்கோம்" என்று கூற எனக்கும் பலமாக சிரிப்பு வந்தது. " அப்போ ! நம்மளும் ஒரு நாள் அம்பேத்கர் மாதிரி பெரிய ஆளா வருவோம்கிற " என்றேன். சிறிது உரையாடலுக்குப்பின் மீண்டும் படிக்கத் தொடங்கினோம். நான் எனது அரைத்தூக்கத்தோடு புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தேன். எனக்கு ரங்கு சொன்ன கூற்று மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. "நாமளும் தெருவிளக்குல படிக்கிறோம் ! அம்பேத்கரும் தெருவிளக்குல படிச்சார்!" என்னை ஒரு எண்ணம் உந்தித் தள்ளி உலுக்கியது. "வருடங்கள் மட்டுமே முன்னேறி இருக்கின்றன ! மக்களின் வாழ்க்கைத் தரம் தேங்கி பின்தங்கி இருக்கிறது இன்றும் !". எவ்வளவு பெரிய கருத்தினை விளையாட்டாக சொல்லிவிட்டான் ரங்கு" என்று எண்ணிக் கொண்டிருக்கையில் எனது அரைத்தூக்கம் ஆவியாய் பறந்தது. வினாடி முள் வேகமாக ஓடியது. வீட்டின் முதல் மாடியில் இருந்து ஒரு keyboard கதறும் ஒலி ஒலித்தது. தெருவே அமைதியாக இருந்ததால் keyboard இன் ஒவ்வொரு ஒலியும் துல்லியமாய்க் கேட்டது. உடனே ரங்கு " லேய் ! மதியக்கா ! அவங்க கச்சேரியை ஆரம்பிச்சிடாங்க இனி தமிழ் படிப்பு தடம்புரளப் போகுது" என்றான். நான் எழுந்து மாடி ஜன்னலைநோக்கி "மதியக்கா ! கொஞ்சம் அடக்கி வாசிங்க ! நாங்க இங்க படிக்கிறோம்ல" என்று கூவினேன். அக்கா ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து " அதிகம் கதைக்காம படிங்க ! இன்னும் கொஞ்ச நேரத்துல நிறுத்திடுவன்" என்றார். "நாங்க கதைக்கிறது இருக்கட்டும் உங்க கானத்த பாத்துட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல ரெண்டு கழுதை வந்து கனைக்கப் போகுது " என்று கூற மேலிருந்து keyboard ஒலி மட்டுமே பதிலாய் ஒலித்தது.
"மதியழகி!" ரங்குவின் வீட்டின் அருகே இருக்கும் வீட்டின் மேல் மாடியில் சமீபத்தில் குடி புகுந்திருக்கும் ஒரு இலங்கைத் தமிழர் குடும்பத்தைச் சேர்ந்தவர். பழகுவதற்கு மிக இனிமையானவர். அதைவிட அக்காவின் தமிழ் மிகவும் இனிமை . அவர்களை கிண்டல் செய்வதற்காகவே அவரிடம் சென்று அடிக்கடி தமிழில் பேசுவதுண்டு. சிறு குழந்தைகளுக்கு tuition சொல்லிக் கொடுப்பதை வேலையாய் கொண்டவர். இரவு நேரங்களில் keyboard மூலம் பலபேருக்கு இன்ப சித்திரவதைக் கொடுப்பவர்,குறிப்பாக எனக்கும் ரங்குவுக்கும். அவரை கிண்டலாக "புலியக்கா" என்று அழைப்பதுண்டு. அவரிடம் நான் அடிக்கடி கேட்கும் கேள்வி "அக்கா ! நீங்க இலங்கை ஆர்மி சப்போர்ட்டா ? இல்ல LTTE சப்போர்ட்டா ?" என்பது தான். அக்கேள்விக்கு அவர் ஒருமுறைகூட பதில் கூறியதில்லை. சிரித்தவாறே சென்று விடுவார் . அன்றும் அக்கேள்வியை வினவும் சூழ்நிலை வந்தது. பொதுவாக விளையாட்டு வினையாகும் என்பது கூற்று. ஆனால் எனது ஒரு கேள்விக்கணை ஒருவரின் வாழ்வில் விளையாடப்போகிறது என்பதை நான் சற்றும் அறிந்திருக்கவில்லை.
மதியக்கா keyboard வாசித்து முடித்துவிட்டு கீழிறங்கி எங்களை நோக்கி வந்தார். "என்ன ! ரெண்டு பசங்களும் அம்பேத்கர் ஆம்லேட் ன்னு கதைத்துக் கொண்டிருக்கிறீர்கள் " என்றார். " என்னக்கா தூங்கலையா ! மணி 12 " என்றேன். " எனக்கு உறக்கம் வரேல்ல ! நாளைக்கு காலைல tuition இல்ல ! அதனால நல்லா கிடந்து உறங்கலாம். " என்றார். நான் மீண்டும் எனது கிண்டலை ஆரம்பிக்க "அக்கா ! நீங்கள் எப்போ தான் இப்படி torture பண்றத நிறுத்தப்போறீங்க" என்று கேட்டேன். அவர் " வாயை மூடிட்டு படி " என்று செய்கை செய்தார். அவ்வுரையாடல் தொடர்ந்து கொண்டேயிருக்க , எங்கள் தெருவின் ஆஸ்தான இராப்பிச்சைக்காரர் "கஞ்சி" என்பவர் எதிர்வீட்டின் திண்ணையில் அமர்ந்துகொண்டார். அவருக்கு "கஞ்சி" என்று பெயர் வர காரணம் இரண்டு. ஒன்று அவருக்கு பிடித்த உணவு "கஞ்சி" வேறு எதைக்கொடுத்தாலும் வாங்கமாட்டார். இரண்டு "கஞ்சி போட்ட காட்டன் சட்டை போல விறைப்பாக நடப்பார். அன்றைய வருமானத்தை வரவு கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தார்.
"அப்புறம் எப்படிடா பரீட்சைக்கு ஆயத்தமாகுறீங்க ? எவ்வளவு எதிர்பார்க்கலாம் " என்றார் மதியக்கா. " வர்றது தான் வரும்கா" என்றேன். "அக்கா ! நீங்க இலங்கை ஆர்மி சப்போர்ட்டா ? இல்ல LTTE சப்போர்ட்டா ?" என்று கேட்க "டேய் ! உனக்கு என்னடா வேணும் " என்று சிறிது கோபமாக கேட்க ,"இல்லக்கா ! அடிக்கடி அங்க பாம் வெடிக்கும்னு நியூஸ்ல பாத்திருக்கேன். அப்போ ஸ்கூல் அடிக்கடி லீவ் வரும்ல " என்று விளையாடக் கேட்க ," டேய் ! அங்க பலபேர் உயிர் போகுது உனக்கு லீவ் பெருசா தெரியுதா !" என்று கோபப்பட்டார். " சரி ! இப்ப ரோடுல ஒரு ஆம்புலன்ஸ் அலாரம் அடிச்சிகிட்டே வேகமா போகுது ! நீ அத பார்த்த என்ன நினைப்பாய்" என்று கேட்டார். நான் ரங்குவைப் பார்த்து சிறிது குழப்பத்துடன் " கொஞ்சம் பதட்டமா இருக்கும்கா " என்று கூறும் போதே எனது மனக்கண்ணில் அக்காட்சி படர உண்மையில் பதறினேன். " எங்க ஊர்ல எப்பவுமே அப்படிதான் பல ஆம்புலன்ஸ் போய்கிட்டே இருக்கும்" என்று கூறினார். அவர் சொல்ல முயலும் விஷயத்தின் வீரியத்தை உணர்ந்தேன். " இப்ப இந்த தெருவுல இராணுவவண்டியும், பீரங்கியும் போய்கிட்டே இருந்தா நீ என்ன பண்ணுவே ?" என்று தனது இரண்டாம் கேள்வியை மிக வலிமையாய் கேட்டார். "ரொம்ப பயமாயிருக்கும் ! நான் வீட்டவிட்டு வெளியவே வரமாட்டேன்" என்றேன். "இந்த நிலைமை தான் எங்க ஊர்ல எப்பவுமே" என்று கூற அவர் காதுகள் சிவந்து , கண்களில் நீர் ஊறுவதைக் காணமுடித்தது. மேலும் தான் படித்து கொண்டிருந்த பள்ளியில் ஒருமுறை வெடிகுண்டு வீசப்பட்டதை நினைவுகூர்ந்தார். "நான் புலியும் இல்ல இராணுவவும் இல்ல சாதாரண தமிழ் மக்கள் அவளோ தான். அங்க எம்மிட மக்கள் ரொம்ப கஷ்டபடுறார்கள் " என்று கூறி முடிக்கும் தருவாயில் அவரது விரல்கள் நடுங்குவதை கண்டேன். கண்கள் பன்மடங்கு விரிந்தன. பற்களை பலமாக கடித்துக்கொண்டார். கைகளும்,கால்களும் கடுமையாக இழுக்க ஆரம்பித்தது. "காக்கா வலிப்பு (பெயர் காரணம்?) " அவரைக் கடுமையாக ஆட்கொண்டது.
"அக்கா! என்ன ஆச்சு " என்று பதற்றத்துடன் அக்காவின் அருகில் நானும் ரங்குவும் செய்வதறியாது துடிக்கும் கைகளைப் பிடித்துக்கொண்டிருந்தோம். இதனை நிதானமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த கஞ்சி " தம்பி! அந்த இரும்பு பாக்ஸ் எடுத்து கைல குடு " என்றார். நாங்கள் அருகில் இருந்த geometry பாக்ஸ் எடுத்து அவரின் கைகளில் திணித்தோம். மாடியிலிருந்து மதியக்காவின் அம்மா கீழே கேட்ட சத்தத்தைக் கேட்டு ஓடிவந்தார். "எந்த தெய்வகுத்தமோ ? என்ற பிள்ளை இப்படி கஷ்டபடுதே என்று அலறிக் கொண்டே மதியக்காவின் அருகில் அமர்ந்து அவருடைய கடிக்கும் பற்களின் நடுவில் விரல்களை திணித்தார். இவ்வாறு செய்ததால் அவருடைய பற்களால் ஏற்படவிருந்த வாய்க்காயம் தடுக்கப்பட்டது.. மெதுவாக அக்காவின் வலிப்பு நிற்க ஆரம்பித்தது. அவருக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. நிதானத்திற்கு வந்து மெதுவாக எழுந்து வீட்டிற்கு சென்றார். நானும்,ரங்குவும் அதிர்ச்சியில் உறைந்தோம். "என்னல ! இப்படி ஆயுடுச்சி " என்றேன். ரங்கு ஒன்றும் சொல்லாமல் அமைதிகாத்தான்.
மறுநாள் மதியக்காவுடன் பேசியபோதுதான் விஷயம் தெரிந்தது. எப்போதெல்லாம் அவருடைய ஊர்பற்றிய பேச்சி வரம்புமீறி போகிறதோ , அப்போதெல்லாம் அவருக்கு இவ்வாறு ஏற்படுமாம். அதனால்தான் பெரும்பாலும் அப்பேச்சினை தவிர்க்கமுயல்வார் என்பதும் தெரியவந்தது. தற்போது செய்திகளில் வரும் இலங்கைத் தமிழர்கள் குறித்த செய்திகளைக் காணும்போது அவர்களின் நிஜநிலையை அறியமுடிகிறது . மதியக்கா கேட்ட அந்த இரண்டு கேள்வியின் ஆழம் இன்று விளங்குகிறது. தற்போது மதியக்கா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாய் வேலைபார்த்துவருகிறார் மேலும் தெய்வம் செய்த குற்றத்திற்காக இன்றும் முதிர்கன்னியாய் வாழ்கிறார் மதியக்கா.
தலையணை அருகே இருந்த கைபேசி அதிர "மணி காலை 8 :30 !". இரவு அந்த நினைவுகளுக்குப்பின் என்னை அறியாமல் தூங்கிவிட்டேன். எழுந்து பார்க்கையில் எனது கண்களில் வழிந்தோடிய கண்ணீரின் தடம் தெரிந்தது. அதன் உண்மையான அர்த்தம் புரிந்தவனாய், வேறேதும் செய்ய இயலாதவனாய் , அமைதியாய் அலுவலகத்திற்கு ஆயத்தமானேன் .

பி.கு : "கால் கை வலிப்பு " என்பது மருவி கருகி "காக்கா வலிப்பு" என்று ஆகிவிட்டது Download As PDF

Sunday, February 7, 2010

களவும் கற்று மற

இடம் :- நாகர்கோயில்
நேரம் :- மாலை 06 :35
கிழமை : வெள்ளி

"மக்கா முத்து! நாளைக்கு சாயுங்காலம் கிரிக்கெட் விளையாடுவோம்ல ! ஏற்கனவே 4 பேர் விளையாட்டுக்கு ரெடி . பேட் இருக்கு ! பால் இனி தான் வாங்கணும் . பைசா வேற இல்ல " என்றேன். நாங்கள் இருவரும் டியுசன் முடிந்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தோம். "பைசாவா ? எதுக்கு மக்கா ? தேவை இல்ல. வழக்கம் போல " என்று கூறி கண்ணடித்தான். நான் அவனைப் பார்த்து சிறிது அதிர்ச்சியுடன் சிரித்தேன். "டேய் ! ஆனா எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு " என்றேன்." பயமா ? ஏம்ல நீ சின்ன பையனா பயபடுறதுக்கு நாம இப்ப 7ம் கிளாஸ் !" என்று காலரை தூக்கிவிட்டான். "களவும் கற்று மற" தமிழ் புக்ல படிச்சிருகோம்ல என்று தமிழையும் இந்த திருட்டுக்கு கூட்டு சேர்த்தான். "தமிழ் புக்ல சொல்லிருக்கு ! வேறு வார்த்தையே கிடையாது " என்று மனதில் நினைத்துக்கொண்டு "சரி" என்று எனது சம்மதத்தை தெரிவித்தேன். எதிரில் ரங்கு என்ற ரங்கசாமியும் , கார்த்தியும் வந்தார்கள். கார்த்திக்கு இந்த திட்டம் பற்றி முன்னரே தெரிந்திருகிறது . அதனால் முத்துவைப் பார்த்து "போலாமா திருவிளையாடலுக்கு " என்றான் . ரங்கு ஏதும் அறியாதவனாய் "எங்க மக்கா போறோம் " என்றான். முத்துவும் ,கார்த்தியும் சிரித்தனர். நான் ரங்குவிடம் திட்டத்தைக்கூற அதிர்ந்தான்." மக்கா ! அதெல்லாம் தப்புலா ! எங்க அம்மா சொல்லிருக்கு " என்று பின்வாங்கினான். நான் அவனை தனியாக அழைத்துச் சென்று மீண்டும் தமிழை ஆயுதமாக்கினேன். ஆனால் "களவும் கற்று மற" அவனை திருப்திபடுத்தவில்லை . இவனை வேறு விதமாய் அணுகவேண்டும் என்று எண்ணிக் கொண்டு " லேய் ! நீ என்ன சின்ன பப்பாவா ? பயந்தோனி பக்கடா !! பருப்பு சட்டிய நக்குடா !" என்று கிண்டலடிக்க அவனது கழுத்து நரம்புகள் புடைத்தன. " போலே ! நான் ஒண்ணும் சின்ன பையன் இல்ல !! பயபடுற ஆள் இல்ல பாயுற ஆள் " என்று போன சனிக்கிழமை பார்த்த "பாயும் புலி " படத்தின் பஞ்ச் ஒன்றை எடுத்துவிட்டு திருட்டில் இணைத்துக்கொண்டான் அரைமனதாக. முத்து, கார்த்தி,நான்,ரங்கு(1/2 மனதாக), திட்டத்தை செயல்படுத்த சென்றோம் முஹம்மது யூசுப் கடைக்கு.
முத்துவும்,கார்த்தியும் திருடுவதில் சிறிது தேர்ந்தவர்கள். நான் இரண்டாம் ரகம். அதிக பயம் கொஞ்சம் தைரியம். ரங்குவிற்கு இதுவே முதல்அனுபவம். கடைக்குச் செல்லும் வழியில் திட்டத்தை சிறிது விவரமாக விளக்கினான் முத்து. "டேய் !! ரொம்ப நேரம் கடைக்குள்ள இருக்கக் கூடாது. எல்லோரும் சேர்த்து போக கூடாது . நீ எடுக்க வேண்டியது எடுத்துட்டு வெளியே போய்டணும். முக்கியமான விஷயம் யாராவது மாட்டினா யாரையும் காட்டிக் கொடுக்கக் கூடாது . முடிச்சிட்டு எல்லாரும் சவேரியார் கோவில் பக்கத்தில இருக்கிற குமார் பரோட்டா கடைக்கு வந்துருங்க , என்கிட்ட 10 ரூபா இருக்கு , பரோட்டா சாப்டுட்டு போலாம் " என்றான். யூசுப் கடையும் வந்தது. ரங்கு சிறிது நடுங்கினான். இம்முறை பந்தை திருட வேண்டியது என் பொறுப்பு. அதைத் தவிர அவனவன் திருடும் பொருள் அவனவனுக்கு சொந்தம் என்பது திட்டத்தின் சிறப்பு அம்சம். முதலில் முத்து உள்ளே நுழைந்து படிக்கும் பையனைப் போல் பென்சில் , பேனா பிரிவிற்குச் சென்று துலாவிக் கொண்டிருந்தான் . அவனுடைய அன்றைய இலக்கு ஒரு "Geometry பாக்ஸ்" . இரண்டாவதாக நான் நேராக விளையாட்டுப் பொருள்களின் பிரிவிற்குச் சென்று பந்துகள் இருக்கும் பக்கெட் அருகே நின்றுகொண்டிருந்தேன். கடையில் வேலை செய்யும் பையன் " என்னனே வேணும் ?" என்றான். "பந்து வேணும் " என்றேன். "ரப்பர் பாலா ? டென்னிஸ் பாலா ? " என்றான் . " ரப்பர்" என்றேன். அவன் பந்துகள் இருக்கும் பக்கெட்டை காட்டி "பாருங்க , எது வேணும்னு சொல்லுங்க" என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு சென்றான். அவன் செல்வதை கண்களால் பின்தொடர்ந்தேன். திடீரென்று கண்ணில் பட்டது "இறகு பந்து". கண்கள் விரிந்தன. எனது நினைவுகளில் ரம்யமாக தோன்றினாள் "ரம்யா".
ரம்யா எனது எதிர்வீட்டு பெண். சிறுவயது தோழி. சமீபத்தில் அவளுக்கும், எனக்குமிடையே நடந்த "இறகு பந்து" போட்டியில் நான் தோற்கடிக்கப் பட்டேன். தோல்வியை ஒத்துக் கொள்ளமுடியாமல் கோபத்தில் அவளுடைய இறகு பந்தினை சாக்கடையில் தூக்கி வீசி ,அதைக் கண்டு அவள் அழுவதைப் பார்த்து ரசித்தேன். அன்றிலிருந்து அவள் என்னுடன் பேசுவதில்லை. இறகு பந்தினால் உதிர்ந்த நட்பினை இறகு பந்தின் மூலமாகவே ஒட்டவைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ரப்பர் பந்தினை மறந்து இறகு பந்திற்கு அருகே சென்றேன். முத்து எனது நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு கொண்டிருந்தான். கன நேரத்தில் இறகு பந்தினை எடுத்து trouserல் சொருகினேன். முத்து கோபமாக என்னைப் பார்த்து ரப்பர் பந்தின் அருகில் செல்லுமாறு கண் ஜாடை செய்தான் . நான் ரம்யாவுடன் ஏற்படப் போகும் நட்பினை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டிருந்தேன். அந்த மகிழ்ச்சியில் பந்து திருடுவது ஒன்றும் பெரிய கடினமான காரியமாக தெரியவில்லை. சுலபமாக எடுத்து வலப்பையில் சொருகினேன். மூன்று பேரும் என்னையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். நான் பந்து எடுத்ததை உறுதி செய்தவுடன் முத்துவும், கார்த்தியும் கண் ஜாடை செய்துவிட்டு கடையை விட்டு வெளியே சென்றனர். ரங்கு மிகுந்த பதற்றத்துடன் எனது அருகில் வந்தான் ." லேய் ! எனக்கு செம பயமா இருக்கு . இதெல்லாம் தப்புலே!" என்று போதனை செய்தான். " லேய் ! முடிஞ்சா நீயும் எதாவது எடு ! இல்ல பொத்திகிட்டு பின்னாலயே வா " என்று கோபமாக கூறினேன். கடைப்பையன் மீண்டும் என்னிடம் வந்து " என்னனே பந்து வேணாமா ? " என்றான். " இல்ல தம்பி ! பந்து quality சரி இல்ல , ஒரு அடி போட்ட பொக்குனு போயிரும் போல இருக்கு ! வேண்டாம்பா " என்று இரண்டு பைகளிலும் கையையை விட்டுக்கொண்டு கடையை விட்டு வெளியேறினேன் . அதுவரை அமைதியாக இருந்த ரங்கு சிறிது கோபங்கொண்டான். கடையின் வாசலை நான் கடக்கும் போது ரங்கு ஓடி வந்து "என்னையா பொத்திகிட்டு வர சொல்றே ?" என்று கோபமாக எனது இடது கையை இழுக்க ,பையில் இருந்து கை வெளியே வர , கையில் இருந்து இறகு பந்து வெளியே வந்து பறந்து கீழே விழ , முதலாளி பார்த்து விட ," அடி திருட்டு நாய்ங்களா !" என்று கர்ஜித்து கொண்டே வெளியே ஓடி வந்தார். அடுத்த கணம் நானும்,ரங்குவும் தலைதெறிக்க ஓடி ஆரம்பித்தோம்.
தூரத்திலிருந்து எங்களைப் பார்த்துக்கொண்டிருந்த முத்துவும்,கார்த்தியும் ஓட்டம் பிடித்தனர். ரங்குவின் இச்செயல் பெருங்கோபத்தை உண்டாக்கியது. இருவரும் முறைத்துக்கொண்டே ஓடினோம். இறுதியில் இருவரும் குமார் பரோட்டா கடையை அடைந்தோம். முத்துவும், கார்த்தியும் எங்களின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தனர். நாய் போல மூச்சி வாங்கிக் கொண்டு அவர்களின் முன் நின்றோம். "பந்து எங்க ?" என்றான் முத்து. " அடபாவி கொஞ்சம்ன மாட்டிருப்போம் தெரியும்ல ! எல்லாம் இந்த குரங்கு பயலால வந்தது. இறகு பந்த தட்டிவிட்டுடான் " என்று ரங்குவை குற்றம் சாட்டினேன். முத்து சிறிதும் லட்சியம் செய்யாமல் "பந்து இருக்குல்ல அது போதும் . வாங்க பரோட்டா சாப்டலாம் " என்றான். மாடிப்படியேறி சென்றோம் . செல்லும் வழியில் " லேய் மக்கா ! சாரி டே! தெரியாம பண்ணிட்டேன். கொஞ்சம்ன மாட்டிருப்போம் " என்று மன்னிப்பு கேட்டான். " அதுதான் நடக்கலலாடே விடு " என்றேன். ஆளுக்கு இரண்டு பரோட்டா வாங்கி நன்றாக பிய்த்து போட்டு சால்னாவில் பரோட்டாவை மிதக்கவிட்டு சாப்பிட ஆரம்பித்தோம். எனக்குள் பலவாறாக எண்ணம் தோன்றியது. செய்வது சரியா? தவறா ? " என்ற கேள்வி. அருகில் இருந்த ரங்கு " என்னடா ரொம்ப யோசிக்கிற ? அடி வாங்கிருந்த எப்படி இருக்கும்னு யோசிக்கிறாயா? " என்றான். " அட போலே ! யூசுப் கிட்ட மாட்டி அடி வாங்கினா கூட பரவாயில்ல . ரம்யாவுக்காக கஷ்டப்பட்டு திருடுன பந்து போயிருச்சே !! அது தான் ஒரு மாதிரி இருக்கு " என்றேன். ரங்குவின் காதுகள் சிவந்தன . "மவனே ! உன்ன திருத்தவே முடியாது " என்று மண்டையை தட்டினான். நன்றாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம். "சரி ! எல்லாரும் நாளைக்கு விளையாட வந்துருங்க " என்று ஆணையிட்டான். "சரி " என்றோம். அப்போது கார்த்தி "கொஞ்சம் பொறுங்கலே " என்று சொல்லிக்கொண்டு தனது பாக்கெட்டில் இருந்து ஒரு கவரினை வெளியே எடுத்தான். "அடப்பாவி " என்றேன். கவரின் உள்ளே இருந்து இரண்டு "பரோட்டாகளை" எடுத்தான். "பரோட்டாவையும் திருடியால நீ " என்றான் ரங்கு. " களவும் கற்று மற மக்கா " என்றான் முத்து . அனைவரும் பலமாக சிரித்தோம். இரண்டு பரோட்டா நான்காக பங்குவைக்கப்பட்டது . அனைவரின் வயிறும் நிரப்பப்பட்டது. வீடு நோக்கிப் பயணப்பட்டோம்.

தற்போதய நிலை :
================
நான் - பெங்களூரில் கணிபொறி வல்லுனராக பணியாற்றுகிறேன்.
ரங்கு - Mechanical engineer . இந்தியாவின் தலை சிறந்த கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறான் .
கார்த்தி - புனேயில் கணிபொறி வல்லுனராக பணியாற்றுகிறான்.
முத்து - இந்திய ராணுவத்தில் நாட்டைக் காக்கும் பணியில் உள்ளான்.
ரம்யா - அழகான இரட்டைக் குழந்தைகளின் தாய். தனது கணவருடன் மதுரையில் வாழ்ந்து வருகிறாள்.

பி.கு :களவும் கற்று மற என்பதின் பல்வேறு விளக்கம்

*அறிந்த விளக்கம் :
==================
*திருடுவதையும் தெரிந்து கொண்டு பின் மறந்து விட வேண்டும் என்பதாக நேரிடையாக ஒரு
பொருள் உலக வழக்கில் எடுத்துக்கொள்ளப் படுகிறது. தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரை சங்க காலப் பாடல்களில் களவுகாதல் என்ற வார்த்தைப் பிரயோகம் அதிகம் வருகிறது. தலைவனும் தலைவியும் திருமணத்திற்கு முன்பே யாரும் அறியா வண்ணம் சந்தித்துக் கொள்வதை களவு என்று அந்த இலக்கியங்கள் குறிக்கின்றன.எனவே இதையும் குறிக்கலாம் என்பது சிலர் கருத்து.

*அறியாத விளக்கம் :
===================
*மேற் கண்ட பழமொழி ' களவும் கத்தும் மற ' என்று வந்திருக்க வேண்டும். இதில்
கத்து என்பது தூய தமிழில் பொய் அல்லது கயமை என்பதாய் பொருள் கொள்ளப் படுகிறது. அதாவது ஆத்திச்சூடி பாணியில் திருட்டையும் பொய்யையும் தவிர்த்துவிடு என்பதாய் சொல்லப்பட்ட இப்பழமொழி நாளடைவில் மறுகி களவும் கற்று மற என்றாகி விட்டது.

நன்றி --> http://groups.google.ge/group/piravakam/browse_thread/thread/0ae2202345ee4840 Download As PDF

Wednesday, November 25, 2009

புனிதமலம் ( The Holy Shit)

இடம் : நாகர்கோயில் .
கிழமை : ஞாயிறு
நேரம் : காலை 9.45

"விர்ர் விர்ர் " என்ற அதிர்வு எனது ஆழ்ந்த தூக்கத்தைக் கலைக்க, பதறி எழுந்து எனது கைபேசியை தேடினேன். தலையணைக்கு அடியில் கிடைத்த கைபேசியில் எனது நண்பன் வசந்திடமிருந்து அழைப்பு.
"என்னடா ! ஞாயிற்றுகிழமை காலையிலயே ?" என்றேன் .
"டேய் ! மணி 10 ! என்னைக்காவது சீக்கிரம் எழுந்துருகியாடா " என்றான் .
"எப்பா ! கருத்து கந்தசாமி எனக்கு செம தூக்கம் வருது ! என்ன மேட்டர்னு சீக்கிரம் சொல்லு " என்றேன்.
"மச்சி ! சொல்றதுக்கு ஒரு மாதிரி இருக்கு " என்றான்.
"என்ன கோவபடுத்தாத! சீக்கிரம் சொல்லு !! நா செகண்ட் இன்னிங்க்ஸ் தூக்கம் ஆரம்பிக்கணும் " என்றேன் .
"இல்ல ! நேத்து நைட் வருணா போன் பண்ணா! " என்று பம்மினான்.
"அந்த கூத்துதான் தினமும் நடக்குதே ! அதுல என்ன ஸ்பெஷல் " என்று அதட்டினேன்.
"நேத்து எனக்கு ப்ரொபோஸ் பண்ணிட்டா டா" என்றான். என்னிடம் ஒரு கோபம் கலந்த அமைதி.
" என்னடா ஒன்னும் சொல்லமாட்ற" என்றான் . அறையின் வெளியில் இருந்து எனது அம்மா " பிரவின் ! எந்த்ரிபா மணி 10 என்று அழைக்க " சரி ! நாளைக்கு மெட்ராஸ் வந்துருவேன் நேர்ல பேசிக்கலாம் இப்போ அம்மா கூப்பிடுறா" என்றேன். " என்மேல கோவம் இல்லேல ?" என்று வினவ "நேர்ல பேசலாம்" என்று சொல்லிவிட்டு கைபேசியை வைத்துவிட்டேன்.
வசந்தும் , நானும் trouser போடாத காலத்திலிருந்தே நண்பர்கள். படிப்பில் கெட்டிக்காரன். தமிழ் கவிதைகள் எழுதுவதில் வல்லவன் . மிக பொறுமைசாலி. அளவுக்கதிகமான தன்னடக்கம் கொண்டவன். அவனது தந்தை அவன் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே இறந்துவிட்டார். அவரது தாய் ஒரு பொதுநூலகத்தில் வேலை பார்த்துதான் வசந்தைப் படிக்கவைத்தார். இப்போது வசந்த் ஒரு சாப்ட்வேர் Engineer . நானும் அவனும் ஒரே வீட்டில் சென்னையில் தங்கி இருந்தோம் . திங்கள் காலை 5 .30 சென்னையில் வீட்டை அடைந்தேன் . வசந்த் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். அவனது கைக்குள் தனது கைபேசியை இறுகப்பற்றிகொண்டிருந்தான். நானும் எனது பாயை விரித்து தூங்கினேன் . காலையில் சூரிய ஒளி ஜன்னல் வழியே சுளீர் என்று அடிக்க , கண்ணை மெல்ல திறந்தேன் , எதிரே வசந்த் குளித்து அலுவலகத்திற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தான். கண்ணாடியின் முன் ஒரு 5 நிமிடநேரம் நின்று தலை வாரியவண்ணம் தனது அழகை ரசித்து சிரித்துக்கொண்டிருந்தான்." எப்போடா வந்த ?" என்றான் என்னிடம். " 5 .30 " என்று ஒற்றைவார்த்தை பதில். திடீரென்று அவனது கைபேசி அலற " மச்சி ! cab வந்துருச்சி !! நைட் பாப்போம்" என்று சொல்லிகொண்டே தனது கம்பெனி ID கார்டை தாலியாக தொங்கவிட்டுக்கொண்டு கதவை அடைத்துக்கொண்டு வெளியே ஓடினான். நான் மீண்டும் போர்வையை போர்த்திக்கொண்டு நன்றாக தூங்கினேன்.
மாலை மணி 7 .45 , நான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி ஆடைகளை மாற்றிக்கொண்டு தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து பாடல் கேட்டுக்கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து தேநீர் அருந்த வெளியே சென்றேன். வீட்டின் முன்னே cab வந்து நின்றது. வசந்த் கைபேசியை காதில் வைத்தவாறே வெளியே வந்தான். " morning 8 .30 க்கு வந்திருங்கணா " என்று cab ஓட்டுனரிடம் சொல்லிவிட்டு ,என்னை நோக்கி "எங்கடா போறே?" என்றான். " டீ குடிக்க !! நீ வரியா ?" என்றேன். " இல்லடா tiredடா இருக்கு ! நீ போ ! வரும்போது ஒரு 7 up மட்டும் வாங்கிட்டு வா " என்று கூறிவிட்டு மீண்டும் கைபேசியை காதில் வைத்துக்கொண்டு தொடர்பைத் தொடர்ந்தான். சிறிது கடுப்பானேன், காட்டிக்கொள்ளவில்லை. 7 up டன் வீட்டிற்கு வந்தேன். வசந்த் கைபேசியோடே இருந்தான். அவனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் தொலைக்காட்சியில் ஆழ்ந்தேன். ஒருவாறாக 9 மணி அளவில் கைபேசியை வைத்துவிட்டு வந்தான் எனது அருகில். " அப்புறம் சொல்றா ! வீட்ல எப்படி இருக்காங்க ?" எங்க வீட்டுக்கு போனியா ? அம்மா எப்படி இருக்குது " என்றான். " எல்லாரும் நல்ல தான் இருக்காங்க " என்று ஒரு மிதப்புடன் பதில் அளித்தேன். அப்புறம் ஊர்ல இருந்து சிப்ஸ் கொண்டு வந்தியா? " என்றான். " பேக்ல இருக்கு பாரு " என்று சுட்டிக் காட்டினேன். ஓடிப் போய் இரண்டு சிப்ஸ் மட்டும் வாயிலே போட்டுக் கொண்டு "அப்புறம் சாப்பிடலாம்" என்றான். " சரி ! சாப்ட போலாமா " என்றேன். இருவரும் உணவு உண்ண சென்றோம் அருகில் இருந்த உணவகத்திற்கு. " டேய் ! டின்னெர் முடிச்சிட்டு வந்து பாம்பு அட்டை (snake and dice ) ஒரு கேம் விளையாடுவோம் " என்றேன். வசந்தின் முகத்தில் சிறிது பதற்றம் ."என்ன? " என்றேன்." இல்ல ! நீ பாம்பு அட்டை விளையாட கூப்ட்ட ஏதோ மேட்டர் இருக்குன்னு அர்த்தம் அதான் யோசிக்கிறேன்" என்றான் . " ரொம்ப யோசிக்காத சீக்கிரம் சாப்டு முடி " என்றேன். வீட்டை அடைந்தோம். சிறிது கிளர்ச்சி அடைந்தவனாய் "மச்சி ! வீக் எண்டுல ஒரு பாட்டு கேட்டேன் ! nice மியூசிக் . நான் போன்ல ஸ்டோர் பண்ணி வச்சிருக்கேன் கேளு " என்று எனது காதில் சொருகினான்." சங்கத்தில் பாட கவிதை அங்கத்தில் யார் தந்தது " என்று ஒலிக்க " டேய் !" என்றேன். " ரொமாண்டிக் சாங் இருந்தாலும் மியூசிக் நல்ல இருக்குல " என்றான் வசந்த். " மவனே ! நீ என் இப்போல ரொமாண்டிக் song கேக்குறேன்னு எங்களுக்கும் புரியும் " என்று தலையாட்டினேன். " ஏன்டா ! எப்ப பாரு சாமியார் மாறி பேசுறே,சொல்லபோன நடிக்கிறே " என்று சொல்லி சிரித்தான் வசந்த். " ஆமாடா ! நான் நடிக்கிறேன் தான் ! இந்த வேஷம் எனக்கு பிடிச்சிருக்கு ! இது தான் எனக்கு வேலியும் கூட " என்றேன் . அவன் பதிலேதும் பேசவில்லை . அந்த அனல்பறந்த சூழ்நிலையை சிறிது மாற்ற எண்ணி " சரி வா ! கேம் ஸ்டார்ட் பண்ணுவோம் " என்று சொல்லி அதற்குரிய வேலைகளில் ஈடுபட்டேன். வசந்த் மீண்டும் அன்பை பொழிந்து கொண்டிருந்தான். " டேய் ! மணி 10 சீக்கிரம் டா " என்றேன் . "ஓகே ! குட் நைட் வருணா " என்று சொல்லி போனை வைத்துவிட்டு எனது எதிர்பக்கம் வந்தமர்ந்தான். "எனக்கு சிவப்பு காய் ,உனக்கு ?" என்றேன் . " எனக்கு "எல்லோ" my லக்கி கலர் " என்றான். "சரி கட்டையை உருட்டு ராஜா" என்றேன். அவன் கட்டையை சகுனி தோரணையில் உருட்ட " டேய் ! ஒரு சின்ன கண்டிஷன் " என்றேன். " என்ன ?" என்று புருவத்தை உயர்த்தினான். " கேம்க்கு நடுவில போன் வந்துச்சின்னு போனே செம காண்டாயுடுவேன் " என்று சொல்ல " அதெல்லாம் நாங்க சொல்லியாச்சி ! மூடிட்டு விளையாடுறையா? " என்று கட்டையை உருட்ட விழுந்தது "ஆறு ". " ஆரம்பமே சிக்ஸர் மச்சி" என்று கலரை தூக்கிவிட்டு மஞ்சள் காயை நகர்த்தினான். நான் காயை உருட்ட விழுந்தது " மூன்று ". பரமபத விளையாட்டின் உள்நோக்கத்தை அவனிடம் கேட்டேன். " டேய் ! ஏதோ ப்ரொபோஸ்ன்னு சொன்னியே ? என்ன மேட்டர் ? " என்றேன் . " அதான் ! சொன்னேனே " வருணா" "என்று கூறிக்கொண்டே உருட்ட விழுந்தது " நான்கு " காய் நகர்ந்தது ,உரையாடலும் தான். "ஹ்ம்ம் ! ஏதோ friend kindunnu பெருசா சொன்னே ! எனக்கு அப்போவே தெரியும்டா !" என்றேன். " டேய் ! அவதானடா ப்ரொபோஸ் பண்ணா ! நா friendடா தான பழகினே " என்றான் பாவமாய். " சரி! நீ என்ன சொன்னே வருணாகிட்ட " என்று கேட்டேன். " ஒரு ரெண்டு நாள் யோசிச்சி சொல்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். உங்கிட்ட discuss பண்ணிட்டு சொல்லலாம்னு தான்" என்று வார்த்தைகளை விழுங்கினான். " அம்மாகிட்ட சொன்னியா ?" என்று வினவ " எல்லாம் உன் இஷ்டம்னு சொல்லிடாங்கடா " என்று சொல்லிக்கொண்டே காயை வீச விழுந்தது "மூன்று" ஹயா ! ஏணி மச்சி !! சர் !! சர் !!" என்று ஓசை எழுப்பியவாறே 30 கட்டங்கள் கடந்தான். ஆட்டம் சிறிது சூடுபிடித்தது. "சரி ! இப்ப நீ என்ன சொல்லப்போற ? உனக்கு பிடிச்சிருக்கா இல்லையா ? " என்றேன். " தெரியலடா" என்றான். "மேட்டர் ரொம்ப சிம்பிள் அப்ப உனக்கும் அவள பிடிச்சிருக்கு " என்று கூற " இல்ல மச்சி ! உனக்கு பிடிக்கலேன்னா விட்டுவிடலாம் " என்றான். அவனை நோக்கி "அப்ப சரி ! தயவுசெய்து விட்ரு" என்றேன் . இதனை சற்றும் எதிர்பார்க்காத வசந்த் " ரீசன் என்னடா ?" என்றான். " நம்ம friend தாஸ் " என்று சொல்லிகொண்டே காயை வீச விழுந்தது "நான்கு".
வசந்த் கடுங்கோபம் கொண்டான். "அது எப்பவோ நடந்த மேட்டர்டா " என்றான்."அதுக்கு ?" என்றேன். " டேய் ! இப்போ சந்திரனுக்கு ராக்கெட் விடுறானுங்க , அது ஒரு தடவே பெயில் ஆயுடுசினா மறுபடியும் விடவே மாட்டாங்களா என்ன ?" என்று கேட்க, சிறிது கிளர்ச்சியுற்ற நான் "எப்ப சாமி !! லவ்வும் , ராக்கெட் சயின்ஸ்சும் ஒண்ணாடா ? பெரிய அப்துல் கலாம் அண்ணன் பையன் மாதிரி பேசுறே " என்று கேட்க , " சிறிது அமைதியானான் வசந்த். "இல்ல மச்சி ! என் விஷயத்துல அப்படி ஒன்னும் பெயில் ஆகாதுன்னு நம்புறேன் " என்றான். அவனது கண்களிலும்,வார்த்தையிலும் ஒரு அழுத்தம் தெரிந்தது. " வருணாவை உனக்கு எவளோ நாள் தெரியும் " என்று கேட்க " 1 இயர் " என்றான். " ஹ்ம்ம்!! ஓகே !! உனக்கு பிடிச்சிருக்கு . ஒரு சின்ன கேம் " என்று கூறி பரமபதத்தை மூடினேன். " டேய் ! வழக்கம்போல எதுவும் விளையாடாத மச்சி ! வாழ்க்கை சமாசாரம் " என்று பதறினான்."ரொம்ப பயபடாத ! நாளைக்குபோய் வருணாகிட்ட சொல்லு "எனக்கு உன்ன பிடிக்கிறது ஓகே ! பட் உங்க parents க்கு என்ன பிடிக்கணும் ,அதனால முதல்ல உன் parents கிட்ட சொல்லு ! அப்புறம் பார்க்கலாம்னு" சொல்லு , அவ என்ன சொல்றான்னு பாரு ! கண்டிப்பா பம்முவா !! " என்று கூறிக்கொண்டே தலையாட்டினேன். சிறிது அதிர்ச்சியடைந்த வசந்த் " டேய் ! என்னடா சொல்றே இவளோ சீக்கிரமாவா? " என்றான். " அப்ப எதுக்குடா லவ் பண்றீங்க ! நல்ல தோள் மேல கைய போட்டுக்கிட்டு ஊர்சுத்தவா ?" என்று கேட்க , மிகவும் களைத்துப்போனவனாய் " மச்சி ! எனக்கு என்னமோ பிரச்னை வரும்போல தோணுது " என்றான். " பிரச்னை வரணும் அதுக்கு தான்! நீ பொய் சொல்லு முதல்ல ! அப்புறம் பாரு அவ reactionன !" என்று பரமபதத்தின் மூலம் அவனது உணர்ச்சிகளை பதம் பார்த்தேன் .மணி 11 .30 . " டேய் ! தூங்குவோம்டா " இருள் சூழ்ந்தது.
மறுநாள் அலுவலகத்திலிருந்து சிறிது களைப்புடன் வந்தான் வசந்த். "என்னடா ! ஓவர் வொர்க்கா? trouser கிழிஞ்ச மாதிரி தெரியுது " என்று சிரித்தேன். பதிலேதும் சொல்லாமல் அவனது வேலைகளை செய்து கொண்டிருந்தான். ஓகே ! நம்ம கேள்வி கணை ஏதோ சித்து விளையாட்டு செய்திருக்கிறது " என்று மனதில் நினைத்துக்கொண்டு "என்னடா ! என்ன reaction ? " என்று கேட்க , கோபம் கொண்டவனாய் அலுவலகத்தில் நடந்ததை விவரித்தான். "நான் அவளிடம் நீ சொன்ன கேள்வியைக் கேட்க, இந்த கேள்வியை நீயா கேட்குறையா இல்ல வேற யாராவது? யாராவது என்ன ? பிரவின் கேட்க சொன்னனா ? " என்றாள். நான் ஒண்ணும் சொல்லாம நின்னேன்டா , அப்புறம் ஒண்ணும் சொல்லாம போய்ட்டாடா " என்றான் வசந்த். நான் வயிறு வலிக்கச் சிரித்தேன். " டேய் ! சிரிக்காதடா" எச்சரித்தான் வசந்த். " வேற என்ன ராஜ பண்ண சொல்றே ! இப்போ backtrack அடிகிறா பாத்தியா இதுக்குதான் சொன்னேன்,சரி விடு என்ன நடக்குதுன்னு பாப்போம்" என்றேன். இரண்டு நாட்களுக்கு வசந்துக்கு வருணாவிடமிருந்து எந்த போனும் வரவில்லை. வசந்த் மிகுந்த கவலை கொண்டான். " என்னடா ஆபீஸ்லயாவது பாத்தியா ? " என்று கேட்க ," ஆபீஸ்ல பேசுறதே இல்லடா !" என்று கூறிக்கொண்டே படுக்கையை விரித்து படுத்தான். "விட்றா மச்சி ! அடுத்த ஜக்கெட்க்கு பிராக்கெட் போடு ! சப்ப மேட்டர் " என்றேன். வசந்திடம் மௌனமே பதில்.
சரியாக நாலாவது நாள் , இரவு வசந்திற்கு ஒரு அழைப்பு , அழைப்பைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி. " ஆங் ! சொல்லு வருணா ! ஆங் ! அப்படியா ! ஓகே ! நாளைக்கு ஆபீஸ்ல detail ல பேசலாம் ஓகே குட் நைட் " என்றான். ஏதோ கற்பனை செய்தவாறு அவனைப் பார்த்து கொண்டிருக்க ஓடி வந்து என் அருகில் அமர்ந்தான். அவனது கைகள் நடுங்கின. " என்னடா ! ஓவர் excitation ன இருக்கு " என்றேன். " அவ ! அவங்க அப்பகிட்ட சொல்லிட்டாளாம்! இந்த வீக் end வீட்டுக்கு வரச் சொன்னாராம் !" என்றவாறே பதற்றத்துடன் சிரித்தான். சிறிது அதிர்ந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் " ஹ்ம்ம் !! குட் டா ! உன் வருணா மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல போல ! தைரியமா சொல்லிட்டாளே ! வீக் endல போய் பாரு " என்றேன். அவனது கைகளில் நடுக்கம் அதிகரிக்க எனது கையைப் பற்றிக்கொண்டு " நீயும் வாடா!" என்றான். " ஹ்ம்ம் !! ஒரு ரெண்டு நாள் யோசிச்சி சொல்லட்டா ? " என்று சிரித்தேன். " டேய் ! மவனே !" என்று எனது கழுத்தை பற்ற "சரி ! ஓகே ! போவோம் !" என்றேன் .
ஞாயிற்றுகிழமை அவளது வீட்டிற்கு சென்றோம் . ஒரு apartmentல் இருந்தது அவள் வீடு . வீட்டின் வெளியே நின்றவாறே வருணாவை கைபேசியில் அழைத்தான் வசந்த். உள்ளே ஒரு கைபேசியில் "தும்பி வா தும்ப பூ " என்று மலையாள பாடல் ரிங் டோன் ஒலிக்க , வசந்தை முறைத்தேன். வேறு ஒன்றும் இல்லை அந்த பாடல் " சங்கத்தில் பாடாத கவிதை " என்ற வசந்தின் ரிங் tone னின் மலையாள version . வசந்த் விஷயத்தை புரிந்தவனாய் என்னை நோக்கி வழிந்து "ரெண்டு பேருக்கும் ஒரு tasteடா " என்றான். " மொக்க பசங்களா ! உங்கள திருத்தவே முடியாதுடா " என்று தலையில் அடித்துக் கொண்டேன் . வருணா வெளியே வந்து " வா வசந்த் !! வாங்க பிரவின் " என்று வரவேற்றாள். அவளது தந்தையும்,தாயும் எங்களை வரவேற்று பேசத் தொடங்கினார். 45 நிமிட நேர்காணலுக்கு பின் முடிவு வசந்திற்கு சாதகமாகவே முடிந்தது. வருணாவின் தந்தை ஆறு மாதம் கழித்து திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்றார் . வருணாவும்,வசந்தும் கண்களாலேயே பேசிக்கொண்டனர். அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டோம். "என்னடா ! சந்தோசமா ? பாம்பு அட்டை விளையாட்டு மாதிரி சர் சர் னு மேல போற போல " என்றேன் . எனது கையை பற்றிக்கொண்டு " தேங்க்ஸ் மச்சி !" என்றான். " அட விடுடா !" சிரித்தேன் நான்.
ஆறு மாதம் ! இருவரும் உருகி உருகி காதலித்தனர். வசந்தின் அம்மாவிற்கு மகிழ்ச்சி. வருணா அவர்களை நன்றாக கவனித்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு செயலிலும் ஊட்டினாள். ஆறு மாதம் கழித்து வசந்தின் திருமணம் வெகு சிறப்பாக நடந்தது . வார இறுதியில் அவர்கள் வீடிற்கு சென்று நன்றாக சாப்பிட்டுவிட்டு வருவது எனது பொழுதுபோக்குகளில் ஒன்றானது . திருமணமான ஒரு மாதம் கழித்து வசந்திற்கு onsite வாய்ப்பு வந்தது. " டேய் ! மச்சி ! 6 months onsite ! வருணாகிட்ட சொன்னா வேண்டாம்னு சொல்லுவானு நினைக்கிறேன். இப்போ தான் கல்யாணம் ஆகியிருக்கு " என்றான்." நீ என்ன சொல்றே ?" என்றேன் . " போனா கொஞ்சம் காசு பாக்கலாம் . முடிஞ்சா வருணாவையும் கூட்டிட்டு போய்டலாம் ஒரு மாசத்துல " என்றான். "அப்போ அவகிட்ட உனக்கு போக விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டேன்னு சொல்லு " என்றேன் . " என்னடா மீண்டும் reverse psychology ?" என்றான் . " போய் சொல்லிப்பாருடா " என்றேன் சிரித்துக்கொண்டே. நினைத்தது நடந்தது .
ஒரு மாதம் கழித்து வசந்த் onsite செல்ல தயாரானான். நான் அவன் வீட்டிற்கு சென்று உதவிக்கொண்டிருந்தேன் . " என்னடா ! வருணா எப்போ ஏர்போர்ட் வருவா ?" என்று கேட்டேன். " இப்போ விழுப்புரம் பக்கத்தில ஏதோ அவங்க மாமா வீடு இருக்கு போல அங்க ஏதோ function அத முடிச்சிட்டு டிரெக்டா ஏர்போர்ட் வந்துருவா ! வந்துட்டு மறுபடியும் விழுப்புரம் போயுடுறா!" என்றான் வசந்த் . " ஓகே ! மச்சி பாப்போம் . எத்தன மணிக்கு flight ?" என்று கேட்க , " காலையில 7 .45 க்குடா வந்துருவேல !" என்றான் . " பாப்போம் !ஒரு வேள தூங்கிட்டேனா வர முடியாது " என்றேன். " எப்ப பாரு தூக்கம் தான ! அப்போ வர மாட்டே தெரியும் " என்றான். அவனிடம் விடைபெற்றுக்கொண்டு எனது வீட்டிற்கு சென்றேன்.
காலை மணி 5 .30 வருணாவின் கைபேசியில் இருந்து அழைப்பு. " ஹலோ " என்றேன். " என்ன சார் ! friend onsite போறாரு ! நீங்க வரமாடீங்க " என்றாள். " இல்ல ! ரொம்ப early flight " என்றேன். வசந்த் பேசினான் ." டேய் ! immigration செக் பாயிண்ட் உள்ள போறேன்டா ! அம்மாவும் இங்க தான் இருக்காங்க" என்றான். " அம்மா எப்போடா வந்தாங்க " என்றேன். " இங்க ஒரு மாமா வீடு இருக்குன்னு சொல்லிருக்கேன்ல அங்க இருந்தாங்க ! ஏர்போர்ட்ல இருந்து அங்க போய் தான் தங்குவாங்க முடிஞ்ச போய் பாரு " என்றான். " கண்டிப்பாடா ! ஆல் தி பெஸ்ட் " என்று சொல்லிக் கொண்டு தொடர்பைத் துண்டித்தேன்.
காலை மணி 9 .45 எனது கைபேசிக்கு மீண்டும் வருணாவிடம் இருந்து அழைப்பு. " சொல்லுங்க வருணா !" என்றேன் . " ஹலோ ! சார் ! நாங்க போலீஸ் பேசுறோம் " என்றது எதிர்ப்பக்கக்குரல். சிறிது குழப்பத்துடன் படுக்கையை விட்டு பாதி எழுந்து " ஆங் ! சொல்லுங்க சார் ! " என்றேன் . " இது யாரோட நம்பர்ங்க? நீங்க யாரு " என்று கேட்டார் . " சார் ! இது என் friend's wife வருணாவோட நம்பர் " என்னாச்சு சார் " என்று கேட்க மிகுந்த பதற்றதுடன் " சாரி சார் ! இந்த பொண்ணு அப்புறம் அவங்களோட வந்தவங்க இங்க செங்கல்பட்டு பக்கத்தில நடந்த ஒரு accidentல spotல இறந்துட்டாங்க !" என்றார். எனக்கு பெரும் அதிர்ச்சி ." என்ன சார் சொல்றீங்க ! கார் நம்பர் என்ன ?" என்றேன். அவர் கூற ஆம் அது வருணாவின் கார் நம்பர் தான் . எனக்குள் பதற்றம் . " கடைசியா உங்களுக்கு தான் போன் பண்ணிருக்காங்க அதான் போன் பண்ணினோம் ! நீங்க வந்து ஒரு தடவ confirm பண்ண முடியுமா " என்றார். "சரி சார் ! நான் வரேன்" என்று கூறி அவரிடம் இடம் பற்றிய தகவல்களை பெற்றுக்கொண்டு ஏர்போர்ட் நோக்கி விரைந்தேன் . போகும் வழியில் பலவாறான எண்ணங்கள் . சந்தோசமாக போய்க் கொண்டிருப்பானே வசந்த் ! அவனிடம் எப்படி சொல்வது . வருணா என்னிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்த தருணங்கள் கண்முன்னே வந்து என்னை கலங்கடித்தது. ஏர்போர்ட்டில் எனக்கு தெரிந்த நண்பன் ஒருவனை பார்த்து விஷயத்தை சொன்னேன் . அவன் பார்த்துக் கொள்வதாய் உறுதியளிக்க செங்கல்பட்டு நோக்கி விரைந்தேன். அங்கு நான் கண்ட காட்சி கோரத்தின் உச்சம் !! அந்த காரில் பயணம் செய்த நான்கு பேரும் ரத்த வெள்ளத்தில் தலையில்லா முண்டங்களாய் கிடந்தனர் . வருணா,அவளது அம்மா,அப்பா மற்றும் ஓட்டுனர். எனக்குப் மிகவும் பிடித்த சிவப்பு நிறம் அன்று என்னை அச்சுறுத்தியது . கண்களால் காண வலுவின்றி திரும்பிக்கொண்டேன். காவலரிடம் பேசிவிட்டு மீண்டும் ஏர்போர்ட் நோக்கி வந்தேன். அங்கிருந்த நண்பன் விஷயம் தெரிவிக்கபட்டுவிட்டதாகவும் , அநேகமாக துபாயில் இருந்தே அவனை வேறு விமானம் மூலம் திருப்பி அனுப்பி வைப்பார்கள் என்றான் . விமானநிலையத்தில் காத்திருந்தேன். வசந்த் வரும் விமானம் தரையிறங்கியது. எனக்குள் பயம் அதிகரித்தது. வசந்தை எப்படி எதிர்கொள்ளபோகிறேன் என்ற கேள்வி . சோதனைகள் அனைத்தும் முடிந்து வெளியே வந்தான் வசந்த். அழுது அழுது வீங்கிய முகம் , கசங்கிய சட்டை , தளர்ந்த நடை. அவன் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு என் அருகே வந்தான்." நீ பாத்தியா? " என்றான் . " ஹ்ம்ம் !" என்றேன் கண்ணீரோடு . " கண்டிப்பா அவதானாடா? " என்று மீண்டும் கேட்டான் . "ஹ்ம்ம்!" என்றேன் . அவனது ஒவ்வொரு கேள்வியும் என்னை துளைத்தது. என்னைக் கட்டிக்கொண்டு "என் லைப் முடிஞ்சு போச்சிடா " என்று கதறி அழுதான்.ஆறுதல் கூற இயலாதவனாய் அவனைக் கட்டிக்கொண்டு நண்பனின் அறைக்குக் கொண்டு சென்றேன் . வசந்த் அழுதுகொண்டே இருந்தான் . அவரிகளின் காதலை நேரில் கண்டதால் அவளின் இறப்பு அது வசந்திடம் உண்டாகிய தாக்கம் எவ்வளவு என்பதை என்னால் உணர முடிந்தது.
4 மாதங்கள் கடந்தன. வசந்த் முன்பைப் போல் கலகலவென பேசுவதில்லை . சென்னையில் அம்மாவோடு தங்கி இருந்தான். சிலநேரங்களில் வசந்த் அம்மா என்னிடம் " பிரவின் ! இவன் இப்படி இருக்கிறது எனக்கு ரொம்ப கஷ்ட இருக்குபா !! அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறனான்னு நீ தான்பா கேட்டு சொல்லணும் " என்பார். நானும் அடிக்கடி சொல்வேன் . அவன் அதனை கண்டுகொள்வதாய் இல்லை. அப்போது தான் வசந்திற்கு 1 வருட onsite வாய்ப்பு வந்தது . வருணாவை மறக்க முடியாமல் தவிக்கும் வசந்திற்கு ஒரு மாற்றம் தேவையை இருந்தது . சரியான நேரத்தில் வந்ததால் அவனை வற்புறுத்தி சம்மதிக்கவைதேன் .
நானும் , வசந்தின் அம்மாவும் ஏர்போர்ட்க்கு சென்றோம் அவனை வழியனுப்ப. அமைதியாய் இருந்தான். வசந்த் தனது அம்மாவை நோக்கி " நல்ல சாப்பிடுமா! ரெஸ்ட் எடு ! எதாவது வேணும்னா பிரவின்கிட்ட சொல்லு " என்றான். சிறிது யோசித்தவனாய் " மச்சி ! என் லைப் கடைசில பாம்பு அட்டை கேம் மாதிரி ரொம்ப வேகமா ஏணில ஏறி , ரொம்ப வேகமா பாம்பு கொத்தி கீழே வந்த மாதிரி இருக்குல்ல " என்று சொல்லி சிரித்தான். எனக்கு அவ்வார்த்தை மிகுந்த வேதனை உண்டாக்கியது. " அப்படிலா ஒண்ணும்மில்லடா! சரி நீ கிளம்பு " என்றேன். வசந்தின் அம்மா என்னிடம் செய்கை செய்ய " டேய் வசந்த் ! " என்று அழைத்தேன்." என்னடா !" என்றான் . "Marriage பண்றதுபற்றி கொஞ்சம் யோசி சரியா !!" என்று வார்த்தையை விழுங்கினேன். என்னை சிறிது உற்றுநோக்கி "Its a Holy Shit டா" என்று கூறிக்கொண்டே Immigration சோதனைச்சாவடிக்குள் சென்றான். அதுவே அவன் என்னிடம் நேரில் சொன்ன கடைசிவார்த்தை. இப்பொழுதும் வாரத்திற்கு இரண்டு முறை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்கிறேன். அதில் அவனது கல்யாணம் பற்றி மீண்டும் மீண்டும் அவனுக்கு எழுதுகிறேன் என்றாவது ஒருநாள் அவன் ஒத்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் . Download As PDF

Monday, September 7, 2009

நான் கண்ட "நாய்க்காதல்" !

இடம் : ராமமூர்த்தி நகர் , பெங்களூர் .

நேரம் : காலை 07:38

கிழமை : ஞாயிறு .

அது ஒரு அழகிய அதிகாலை பொழுது. விடுமுறையில் மட்டும் அதிகாலை சீக்கிரமாக எழுந்துவிடும் பழக்கம் கொண்டவன் நான். காலையில் எழுந்து ,காலை கடன்களை சிறப்பாக முடித்துவிட்டு எனக்கு தெரிந்த சில உடற்பயிற்சிகளை செய்து கொண்டிருந்தேன். வீட்டின் முன்னே இருந்த அறையில் எனது ரூம் மேட் பார்த்திபன் (என்னை விட மூன்று வயது சிறியவன்) நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அரை மணி நேரம் உடற்பயிற்சி என்பது என் கணக்கு. கடைக்கு சென்று தேநீர் அருந்தலாம் என்று எண்ணி ஜன்னல் வழியே மழை பெய்கிறதா ? என்று வெளியே நோக்கினேன். நல்ல பனிமூட்டம். எதிரே இருப்பது குத்துமதிப்பாக தான் தெரிந்தது. அதனால் சிறிது கண்களை அகலமாக்கி உற்று நோக்கினேன்.பனி மூட்டதிற்கு நடுவே ஏதோ கருப்பு உருவம் அசைவது போல் தோன்றியது. "என்னடா அது ! " என்று என்னுள் ஆர்வம் மிகுந்தது. உற்று நோக்க "அட நம்ம கைப்புள்ள ! டேய் பார்த்தி உங்க ஆளு கைப்புள்ள காலங் காத்தலயே வந்துடாரு ! எப்பவும் இவினிங் தான வருவாரு " என்றவாறே ஜன்னலை மீண்டும் நோக்கினேன். பனிமூட்டம் மெல்ல விலக அங்கு நான் காட்சி என்னுள் கால் பாதத்திலிருந்து கபாலத்தை நோக்கி இரத்தத்தை பீய்ச்சி அடித்தது . சிறிது அதிர்ச்சி. காரணம் கைபுள்ளைக்கு பின்னே இன்னொரு உருவம் .
முதலில் யார் இந்த கைப்புள்ள ? சிறிது முன்னோட்டம் .
நான்கு மாதத்திற்கு முன்பு ஒரு நாள் மாலைப்பொழுது.அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வீட்டு வாசலில் உடம்பெல்லாம் மச்சம் என்று என்னும் அளவு கருப்பு நிறத்தில் ஒரு நாய் படுத்திருந்தது." என்னடா ! புது என்ட்ரியா இருக்கு ! சூ போ போ !! " என்று விரட்டினேன். அதுவும் பயப்படுவது போல பாவலா செய்துவிட்டு சென்றுவிட்டது. இரவு உணவு உண்டுவிட்டு வீடு நோக்கி வந்து கொண்டிருந்தேன். மீண்டும் அதே நாய் , அதே தோரணையில் படுத்திருந்தது என் வீட்டு வாசலில். என்னுடன் இருந்த பார்த்திபனை நோக்கி " என்னடா ! இது இங்கயே செட்டில் ஆயிடும் போலிக்கே !" என்றேன் . "விடுங்கண்ணே ! நாய் தானே அது பாட்டுக்கு இருக்குது " என்றான். "சரி விடு " என்று விட்டுவிட்டேன் . நாட்கள் கடந்தன. மாலை என் வீடு வாசலுக்கு வந்து விடவேண்டியது . காலை எழுந்து எங்கோ சென்று விடவேண்டியது . இதுவே அந்த நாயின் வழக்கம் ஆயிற்று. பார்த்திபனும் நாயுக்கு சிப்ஸ்,பிஸ்கட் என்று உணவு பதார்த்தங்களை கொடுக்க ஆரம்பித்தான். அதற்கு "கைப்புள்ள" என்று பெயரும் சூட்டினான். "தம்பி பார்த்தி ! இதெல்லாம் நல்லதுக்கில்ல ! ஒரு நாள் இந்த நாய் உன்கிட்ட இருந்து கால் கிலோ கறிய கடிச்சிட்டு ஓடப் போகுது பாரு" என்றேன் அடிக்கடி." அதெல்லாம் ஒண்ணுமில்லனே ! பாவம் கைப்புள்ள " என்று அனுதாப அலையை அடித்து விட்டான் பார்த்திபன்.
எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு தெலுங்கு தம்பதியினர் வசித்து வந்தனர்.அவர்கள் வீட்டில் ஒரு அழகிய உடல் முழுவதும் புஸ் புஸ் என்று முடிகளைக் கொண்ட வெள்ளை நாய் ஒன்று வளர்த்து வந்தார்கள். அவர்களுக்கு குழந்தை இல்லா குறையை இந்த நாய் தீர்த்து வைத்தது. தினமும் காலை மற்றும் மாலை அந்த நாயினை வாக்கிங் கூட்டிச்செல்வார் அதன் உரிமையாளர். அப்போது "ஹே லிசா ! Able to walk ? ! Legs are paining ?" என்று பெண் குழந்தையை கொஞ்சுவது போல் பேசிப் பாதுகாப்பார்.ஒருமுறை அவ்வாறு வெளியே வாக்கிங் வந்த போது என் வாசலில் இருந்த கைப்புள்ள லிசாவை நோக்கி பலமாக குரைக்க ஆரம்பித்தது. பதிலுக்கு லிசாவும் எகிற ஆரம்பித்தது . அதன் உரிமையாளர் அதன் சங்கிலியை இறுகப் பற்றிக் கொண்டு " ஹே லிசா !! காம் டௌன் !! காம் டௌன் !" என்று சாந்தப்படுத்தினார்.இரு நாய்களும் இந்திய ,பாகிஸ்தான் இராணுவம் போல ஒரு போருக்கான பிரம்மையை உண்டாக்கிவிட்டு அமைதியாகிவிட்டன. இதனை கண்ட நான் "டேய் பார்த்தி! இந்த கைப்புள்ளயால நமக்கு ஒருநாள் பூச கெடைக்கப்போகுது பாரு !" என்றேன் . நாட்கள் உருண்டோடின. தினமும் இரு நாய்களும் சந்திக்கும் போதெல்லாம் எகிற ஆரம்பித்தது . இரு வீட்டாரும் அதனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
மேற்குறிப்பிட்ட நாள் மற்றும் நேரம் , நான் கைபுள்ளயின் பின்னே கண்ட உருவம் "லிசா" .ஆம் ! அங்கு நமது கைப்புள்ள ஆயர்கலை 64கையும் லிசாவுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார். எப்படிடா இந்த லிசா வெளியே வந்துச்சு " என்று எண்ணிக் கொண்டிருந்தேன். "டேய் பார்த்தி !இங்க வந்து பாருடா ! இன்னைக்கு சனியன் சடைபோட ஆரம்பிச்சிருச்சி !" என்று அலறினேன். அவன் "என்னனே ஆச்சி !" என்று படுக்கையை விட்டு ஓடிவந்தான் . இருவரும் கதவை திறந்து வெளியே வர , அதே நேரம் பக்கத்துக்கு வீட்டு ஆன்டி யும் வெளியே வந்து பார்க்க உடனே "ஏண்டி ! பயடகு வச்சி சூடு எமவுதுந்தோ !!" என்று அலறி தான் கணவரை அழைக்க அவர் பதறி அடித்து வெளியே வந்து கைப்புள்ளையும் ,லிசாவும் புணர்ந்து கொண்டிருப்பதை கண்டு "தொங்கனா குக்கா!!" என்று வீட்டிற்ககுள் கோபமாக சென்றார். அவர் என்ன செய்ய போகிறாரோ என்ற பதட்டத்தில் அவரின் வீட்டு வாசலை பார்த்துகொண்டிருக்க வந்தார் வெளியே ஒரு பெரிய இரும்புக் கம்பியோடு. எனக்கு இதயம் வேகமாக துடிக்கதொடங்கியது . இரு நாய்களுக்கும் அருகே வேகமாகச் சென்று தான் கொண்டு வந்த கம்பியால் கைப்புள்ளயின் பின்புற இடது காலில் "டங் !!" என்று அடி விட்டார் . பார்த்தி முகத்தை திருப்பிக்கொண்டான்.எனக்கு பிடரியில் "டங்!!" என்று அடித்ததை போல் ஒரு உணர்வு. அடிப்பட்ட கைப்புள்ள "ஆங் ! ஆங்!!" என்று குரைத்து கொண்டு லிசாவிடம் இருந்து விலகி வில்லில் இருந்து விடுப்பட்ட நாணை போல காற்றைக் கிழித்துக்கொண்டு அலறியடித்து கொண்டு ஓடியது. அப்படியே தெருமுனை நோக்கி ஓடி மறைத்தது. லிசாவின் உரிமையாளர் எங்களை முறைத்துக்கொண்டு , லிசாவை இழுத்துக்கொண்டு தன் வீட்டிற்கு சென்றார். எங்கள் வீட்டில் நிஷப்தம். நானும் , பார்த்திபனும் அமைதியாக இருந்தோம். கைபுள்ளைக்கு விழுந்த அடி எங்களுக்கு விழுந்த அடிபோல தோன்றியது. அவனை சிறிது உற்சாக படுத்த எண்ணி "சரிடா ! பார்த்தி சாப்ட போவோமா !" என்றேன். "இல்லனே! எனக்கு ஒன்னும் வேண்டாம் ! நீங்க வென போயிட்டு வாங்க" என்றான். "என்னடா! கைப்புள்ள அடிவாங்கின பீலிங்க்ஸ்சா!!? அது அடிவாங்குனதுக்கு அதன் லவ்வர் லிசா நாய்கூட இவளோ பீல் பண்ணாது ! நீ விட்டா கண்ணீரே விடுவ போல?" என்று சொல்லி சிரித்தேன். கோபங்கொண்ட பார்த்திபன் "அண்ணே ! ரொம்ப நக்கல் பண்ணாதீங்க ! உங்களுக்கு வேணும்னா போய் சாப்டுட்டு வாங்க !" என்றான். அவனது கோபத்தை சற்றும் எதிர்பார்க்காத நான் " நீ வேணும்னா பாரு ! வாங்கின அடிக்கு அந்த கைப்புள்ள இந்த பக்கம் எட்டியே பார்க்காது. கெட்டதிலையும் ஒரு நல்லது "என்றேன் . பார்த்திபன் அமைதிகாத்தான். இரண்டு நாள் கழிந்தது. கைப்புள்ளயை வீட்டின் முன் காணவில்லை. பார்த்தியை நோக்கி "என்னப்பா ! சொன்னனா இல்லையா கைப்புள்ள இந்நேரத்துக்கு கசாப்பு ஆயிருக்கும்" என்றேன். பார்த்தியிடமிருந்து மீண்டும் அமைதியே பதில்.
மூன்றாவது நாள் மாலை நானும்,பார்த்தியும் தேநீர் அருந்த வீட்டைவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தோம். தெருவில் தனது ஒரு காலைத் தூக்கிக்கொண்டு ,மூன்று கால்களால் நொண்டி நொண்டி வந்துகொண்டிருந்தது கைப்புள்ள. அதனைக் கண்ட பார்த்திபனுக்கு முகம் மற்றும் அகமலர்ச்சி. எனக்கோ அதிர்ச்சி. மெதுவாக வந்து பார்த்திபனின் காலை நக்கியது கைப்புள்ள. பார்த்திபன் அதன் அருகே அமர்ந்து அதன் அடிபட்ட காலை தடவிகொடுத்தான்."பாத்தீங்களா ! பெருசா ஏதோ சொன்னீங்க ! இப்ப என்ன சொல்றீங்க!" என்றான். இம்முறை என்னிடமிருந்து அமைதி பதிலாக. நானும் பார்த்திபனின் அருகில் அமர்ந்து கொண்டு கைபுள்ளையை தடவிகொடுதேன். மீண்டும் எங்கள் வீட்டில் கைபுள்ளயின் விஜயம்.
சரியாக 66 நாட்கள் கழித்து. நான் வீட்டு வாடகை கொடுப்பதற்க்காக வீட்டு உரிமையாளர் வீட்டிற்கு சென்றேன். அங்கு எனது பக்கத்துக்கு வீட்டு தெலுங்கு ஆன்டியும் வாடகை கொடுக்க நின்றுகொண்டிருந்தார். நான் அவரை கண்டும் காணாதது போல் நின்றுகொண்டிருந்தேன் ."ஹாய் " என்றார் ஆன்டி. நானும் "ஹலோ ! ஆன்டி !" என்றேன். " ஐ வான்ட் டு டெல் யு ஒன் நியூஸ் !" என்றார். "எஸ் ஆன்டி " என்றேன்."லிசா கேவ் பிரத் டு த்ரீ பப்பீஸ்" என்றார் . எனக்குள் மட்டற்ற மகிழ்ச்சி." இஸ் இட் !! தட்ஸ் எ நைஸ் நியூஸ் ஆன்டி " என்றேன். இருவரும் விடை பெற்றுக்கொண்டு சென்றோம். நான் ஓடிச் சென்று பார்த்தியிடம் "டேய் ! பார்த்தி ! நம்ம கைப்புள்ள அப்பா ஆயிட்டார்டா !" என்றேன். பார்த்தி "ஆகா !! அப்படியா !! எத்தன குட்டி " என்றான் . " மூணு பா மூணு !! என்றேன் . அவன் " சூபெர் சூபெர் !!" என்று கூவினான்.வெளியே படுத்திருந்த கைபுள்ளயின் அருகில் சென்று "அடேய் ! கைப்புள்ள ! காலை கடனை முடிக்க வந்த ஒரு கண்ணிபொன்ன இப்படி கற்பமாக்கி மூணு குழந்தைய குடுதுட்டயே !! ஆனாலும் அடி வாங்கிட்டு இங்கயே வந்துருக்கே பாரு ! நீ பெரியா ஆளு தான்" என்றேன். கைப்புள்ள பாவமாக என்னை நோக்கியது. "அது திரும்ப வந்துருக்குனா அதுக்கு காரணம் அது லிசா மேல உள்ள லவ்வுனா !! லவ்வு !!" என்றான் பார்த்திபன். "அட அது திரும்ப வந்ததுக்கு காரணம் லிசா மேல உள்ள லவ்வு இல்ல டா ! உன் மேல உள்ள நன்றி ! அது தான்டா லவ்வு " என்றேன். மெல்ல புன்னகைத்தான் பார்த்திபன். ஆம் !! எனக்குத் தோன்றிய உண்மையான உணர்வு அது.
இரண்டு வாரம் கழித்து லிசாவின் உரிமையாளர் லிசா ,மற்றும் மூன்று குட்டிகளுடன் வாக்கிங் வந்தார். அக்காட்சியினை கண்ட எங்களுக்கு மகிழ்ச்சி. இம்முறை லிசா கைபுள்ளையை நோக்கி குரைக்க ! கைப்புள்ள லிசாவை நோக்கி எகிற! லிசாவின் உரிமையாளர் "லிசா! காம் டௌன் !! காம் டௌன் !!" என்று திமிர. "அட மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்கயா!!" நானும் பார்த்தியும் மகிழ்ந்தோம் குதூகலத்தில் . Download As PDF

Wednesday, August 26, 2009

பழக இனிமை ! பணியில் நேர்மை !

இடம் : நுங்கம்பாக்கம் ,சென்னை.

நேரம் : இரவு 01:30

கிழமை : மீண்டும் சனி (இம்முறை சற்று மூர்க்கமாக!)

தமிழ் படங்களின் தாக்கம் என்னுள் உச்சத்தை அடைந்து ,நொந்து ,மீண்டும் கீழ் நோக்கி விரைந்து கொண்டிருந்த காலம். சென்னையில் ஒரு IT கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தேன்.கல்லூரி நண்பர்களுடன் ஒரு வீடு எடுத்து தங்கி இருந்தேன். சில நண்பர்களை வார இறுதியில் தான் பார்க்க முடியும் . மற்ற நேரங்களில் கவுண்டர் பாணியில் "நா ரொம்ப பிஸி" என்பர். பொதுவாக Bachelors மத்தியில் "சனி இரவு காய்ச்சல்" (Saturday Night Fever) மிகுந்து காணப்படும். பலர் சரக்கு அடித்து பரவச நிலைக்குத் தள்ளப்படுவர்.அந்த பழக்கம் இல்லாத சிலர் நல்ல ஹோட்டல் போய் நன்றாக மொக்கி விட்டு திரையரங்கிற்குச் சென்று தலைவிதியே என்று ஏதேனும் தமிழ் படத்தைப் பார்பர். இதில் முதலில் குறிப்பிட்ட பழக்கம் இல்லாததால் நான் இரண்டாம் ரகம்.
அன்று இரவு நானும் , எனது நண்பன் அய்யப்பனும் தீபாவளி வெளியிடான "சிவகாசி" படத்திற்கு போகலாம் என்று முடிவு செய்து "உதயம்" திரையரங்கிற்குச் சென்றோம் ."சிவகாசி" அய்யப்பனின் சொந்த ஊர்,அதனால் சிறிது குஜாலுடன் காணப்பட்டான். படத்தின் இயக்குனர் பெயரை போஸ்டேரில் தேடினேன் ."பே .....ரரசு". "ஐயோ ! சும்மாவே இவன் "Somersault" அடிப்பான், தீபாவளினா கண்டிப்பா திருவிழா கொண்டாடாமவிடமாட்டான்" என்று மனதை திடப்படுத்திக் கொண்டு ஒரு மூன்று மணி நேர ஆயுள் தண்டனைக்கு தயாரானேன்.மணி ஒலித்தது."வாடா ! போலா !" என்றான் ஐயப்பன்.உள்ளே சென்றோம்.
படம் தொடங்கியது. ஓடியது,ஓடியது,ஓடிகொண்டே இருந்தது . மூன்று மணிநேரத்திற்கு பிறகு ! மணி 12:30.திரை அரங்கினை விட்டு வெளியே வந்தேன் சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில். அவ்வாறு இருந்தது அப்படம். "படம் செம சூப்பர் டா ! படத்தோட பெயர் அப்படி " என்று ஊர் பெயர் சொல்லி மார்தட்டிக் கொண்டான் ஐயப்பன்."சரி விடு டா ! இப்போ என்ன ப்ரோக்ராம் " என்றேன்.உடனே என் நண்பன் பிரேமிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு ."மச்சி ! எங்க இருக்கடா !" என்றான்."இப்பதான்டா படம் முடிஞ்சிது " என்றேன். "அப்போ எங்க வீட்டுக்கு வந்துருடா ! எவளோ நேரம் ஆகும் ?" என்றான். அய்யப்பனிடம் அனுமதி வாங்கிவிட்டு "பிரேமு ! இன்னும் முப்பத்து நிமிஷத்துல அங்க இருப்போம்டா " என்றேன்."சரிடா ! வந்துட்டு கால் பண்ணு !"என்றான்.
இருவரும் ஆட்டோவில் ஏறி பிரேமின் அபார்ட்மென்ட் நோக்கி சென்றது கொண்டிருந்தோம்.மணி இரவு 1. அபார்ட்மென்ட் வாசலை அடைந்தோம். எனது உயர வாசல் கதவு சங்கிலியால் பூட்டபட்டு இருந்தது."பிரேமு ! வந்துடோம்டா !" என்று தொலைபேசி மூலம் அழைத்தேன்." 2 நிமிஷம் மச்சி" என்றான். நானும் ,அய்யப்பனும் ரோட்டை அளந்து கொண்டிருந்தோம்."மச்சி ! என்னடா இன்னும் ஆள காணல !" என்று கதவு மேல ஏறுவது போல் படம் போட்டேன். "பொறுடா ! வருவான் !" என்றான் ஐயப்பன். "டேய் ! எனக்கு பிஸ் வருது டா ! நா போய் டவுன்லோட் பண்ணிட்டு வரேன்டா " என்று ஓரமாய் ஒதுங்கினேன்.திடீரென்று சாலையில் மாநகர காவலர்கள் ஜீப் ரோந்து வண்டு கொண்டிருந்தது .ஐயப்பன் அபார்ட்மென்ட் முன் நிற்பதை பார்த்தவுடன் வண்டியை நிறுத்தினர்." டேய் ! இங்க வாடா !" என்று மிக மரியாதையுடன் அய்யப்பனை அழைத்தனர். அவனை அழைத்ததைக் கண்டவுடன் எனக்கு பிஸ் நின்றுவிட்டது."என்னடா ! உனக்கு தனியா வெத்தல பாக்கு வைக்கணுமா ! வாடா " என்று என்னையும் அழைத்தனர். "ஆஹா ! இன்று சனி சடுகுடு ஆட ஆரம்பித்து விட்டது " என்று என்னுள் ஒரு எண்ணம் . " என்னடா பண்றீங்க இங்க , மணி ஒன்னு ஆச்சி " என்றார் ஏட்டு ஒருவர் . "சார் ! friend வீடு இங்க இருக்கு சார் ,அவன் உள்ளருந்து வந்துட்டு இருக்கான் சார் " என்று வார்த்தைக்கு வார்த்தை சார் போட ஆரம்பித்தேன்."ஆமாடா ! இன்னைக்கு friend வீடுன்னு சொல்லிட்டு அவன் வீட்டுக்கு போவீங்க ! நாளைக்கு அவன் எங்ககிட்ட வந்து "செல் போன் காணல ! underwear காணலனு எங்ககிட்ட வந்து கம்ப்ளைன்ட் குடுத்து எங்க தாலிய அறுப்பான்.இதுவே உங்களுக்கு வேலைய போச்சு ! ஏறுங்கடா வண்டியில " என்று மிரட்டினார்.அதுவரை விஷயத்தின் வீரியத்தை உணராத எனக்கு அடிவயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்தது. எனது கற்பனை குதிரையின் ஓட்டம் படுவேகமா இருந்த காரணத்தால் என் கண்முன் ஒரு கற்பனை திரை தோன்றியது.அதில் நானும் ,அய்யப்பனும் ஜெயிலில் underwearருடன் அடி வாங்கும் காட்சி.இதில் ஐயப்பன் அடி வாங்கி துள்ளி குதிப்பதைப் பார்த்து எனக்கு சிரிப்பு வேற." சுயநினைவுக்கு மீண்டும் வந்தேன் ."டேய் ! பிரேமு! 2 நிமிஷத்துல வரேன்னு சொன்னியேடா !! எங்கடா போனே " என்று மனதிற்குள் கதறினேன்.
"ஏறுங்கடா! உள்ள! " மீண்டும் உறுமல் எங்களை உலுக்கியது . "சார் ! நாங்க IT கம்பெனியில வொர்க் பண்றோம் சார் . படம் பார்த்துட்டு வரோம் சார். வேணும்னா விசிடிங் கார்ட பாருங்க சார் " என்றேன். " ஓஹோ ! நீங்க தான் 20 வயசில 40 ஆயிரம் சம்பளம் வாங்குரவங்களா !! உங்களுக்கெல்லாம் சம்பாதிக்கிறோம்கிற மப்புடா !"என்றார் . கழுத்திற்கு கத்தி நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன் . "பேசாம ரெண்டு பெரும் மூடிட்டு வண்டிக்குள்ள ஏறுங்க" என்று வாயை பொத்தி சைகை செய்தார் .அதுவரை அமைதியாய் இருந்த ஐயப்பன் சிறிது கிளர்ச்சி அடைந்தான்."எதுக்கு சார் ! நாங்க வரணும் . நாங்க என்ன தப்பு செஞ்சோம் .! அதெல்லாம் வர முடியாது "என்று எகிறினான். கண நேரத்தில் ஐயப்பனின் சட்டை காலரை கைப்பற்றினார் ஏட்டு."சர் !! சர்க்!! டர் !!" என்று சட்டை காலர் கிழியும் சத்தம்." என்னடா ! சின்ன பையன்னு பாத்த ரொம்ப துள்ற !! அப்படியே பொடதியில ஒன்னு போட்டேன்னு வை மவனே ! ஏறு டா உள்ள !" என்றார். இதைக் கண்ட என் கண்கள் சிவந்தன ! ரத்தம் கொதித்தது ! நரம்புகள் முறுக்கேறின !"இந்தியன் தாத்தா முதல் முதல்வன் வரை அத்தனை கதாபாத்திரங்களும் என்னை உள்ளிருந்து உந்தித்தள்ளின. ஆனால் ஐயப்பன் சட்டை காலர் கிழிந்த சத்தம் மீண்டும் மீண்டும் என் காதில் "சர்!!சர்க்!!டர் !" என்று ஒலித்து கொண்டே இருந்தது . அமைதியாக வண்டிக்குள் சென்று அமர்ந்து கொண்டேன்.உடனே ஏட்டு அய்யப்பனை பார்த்து "பாத்தியா ! அந்த பையன ! சொன்ன உடனே உள்ள போய் இருக்கான் . நீயும் போபா தம்பி" என்றார். ஐயப்பன் என் அருகில் அமர்ந்தான் . அவனது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. வண்டி மெதுவாக நகர பிரேம் ஒரு முண்டா பனியன் ,ஒரு லுங்கியுடன் வெளியே எங்களை தேடிக் கொண்டிருந்தான். என்னை அறியாமல் "மச்சி " என்று வண்டிக்குள் இருந்து கைக்காட்டினேன். “டேய் ! என்னடா போலீஸ் வண்டியிலயே லிப்ட் வாங்கிட்டு வந்துடீங்களா !" என்று சொல்லிக்கொண்டு ஓடிவந்தான்."யாருபா நீ " என்றார் ஏட்டு ." சார் ! இவங்க என் friends " என்றான் பிரேம்."சரி போலீஸ் ஸ்டேஷனக்கு வந்து லெட்டர் எழுதி குடுத்திட்டு ரெண்டு பேரையும் கூட்டிட்டு போ !" என்றார். வண்டி வேகமாக நகர்ந்தது .அருகில் ஐயப்பன் அழுதுகொண்டிருந்தான்.எனக்கோ மனதில் எண்ண ஓட்டங்கள். சாலையில் நான்கு இளைஞர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.அவர்களிடமும் காவலர்கள் அதே மிரட்டலை விடுத்தார்கள். அவர்கள் ஏதோ புரியாத வடநாட்டு மொழியில் "மங்கீசா ! கிங்கீசா ! கிங்கீசா ! பாயாசா !" என்று பதில் அளித்தனர். உடனே ஏட்டு "விடு. வண்டில எடமில்ல !! ஒழுங்கா வீடு போய் சேருங்கடா !" என்றார். எனக்குள் பெரும் அதிர்ச்சி .அட பாவிகளா ! இது தெரிந்திருந்தா நம்மளும் நமக்கு தெரிந்த ஹிந்தி ல " ஏக் காவ் மெய்ன் ஏக் கிசான் ரகுதாத்தா !" என்று பேசி தப்பி இருக்கலாமோ ?" என்று எண்ணினேன். ஆனால் எனது திராவிட நிறமும் ,என் முகத்தில் தாண்டவமாடும் தமிழன் என்ற ரேகையும் கண்டிப்பாக எனக்கு தர்ம அடி வாங்கிக் கொடுத்திருக்கும் என்பது உறுதி. வண்டி ஸ்டேஷன் அடைந்தது . எங்களின் அங்க அடையாளங்கள் எழுதப் பட்டது .சரியாக ஒரு மணி நேரம் கழித்து பிரேம் வந்தான். கம்ப்ளைன்ட் எழுதிய பிறகு எங்களை அழைத்து செல்ல அனுமதித்தார்கள்."சார் ! பேரை வச்சி ஒன்னும் பண்ணிடாதீங்க சார் !" என்றேன் ."அட ! இதெல்லாம் சும்மா ஒரு கணக்கு காட்டுறதுக்கு தா !! வேற ஒன்னும் இல்ல ! சரி கொஞ்சம் பாத்து செஞ்சிட்டு போங்க " என்றார் ஏட்டு . எதிரே இருந்த போர்டு டை நானும் பிரேமும் நோக்கினோம் அதில் "சென்னை மாநகர காவல் நிலையம் " முதல் வரியில் . இரண்டாம் வரியில் "பழக இனிமை !! பணியில் நேர்மை !" . இது என்ன கொடுமை என்று நினைத்துக்கொண்டு பிரேம் ஒரு நூறு ரூபாய் கொடுத்தான் .உடனே போட்டார் ஒரு மாஸ்டர் சலுட் .பணம் பேசுகிறது. மணி 3 . பிரேம் வீட்டிற்க்கு வந்து நிம்மதியாக பிஸ் அடித்து விட்டு தூங்க ஆரம்பித்தேன் .
காலை 10 மணி செல் போன் அலறியது.அழைப்பு என் நண்பன் ரங்கராஜன் திருநெல்வேலியில் இருந்து. "சொல்றா !" என்றேன் தூக்க கலக்கத்தோடு ."என்னடா ! நேத்து நைட் தியேட்டர் ல ஏதோ பொண்ணுங்ககிட்ட சில்மிஷம் பண்ணிடீங்கலாமே ! போலீஸ் stationனுக்கு போநேங்கலாமா ? ! எப்படியோ History ல வந்துடீங்க டா !" என்றான் . எழுந்து பார்த்தேன். பிரேமும் ,அய்யப்பனும் அருகில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள் ."கிரி" வடிவேலு பாணியில் " அட பாவிகளா ! நைட் புல்லா நம்ம கூட தான இருந்தானுங்க ! அதுக்குள்ள எப்படி மேட்டர் திருநெல்வேலி வர போச்சி " என்ற அதிர்ச்சியுடன் "அட ! அது ஒன்னும் இல்ல மச்சி நேத்து நைட்."என்று முழு கதையையும் அவனிடம் சொல்ல ஆரம்பித்தேன் சின்ன புன்சிரிப்போடு. Download As PDF

Tuesday, August 11, 2009

அய்யனாரும் ஆக்கரும் !

இடம்: மெப்கோ பொறியியல் கல்லூரி

நேரம்: இரவு 7.37

கிழமை: சனி (அன்று எனக்கு 7 1/2 என்று அறிந்திருக்கவில்லை)



எனது வாழ்வின் மிக முக்கியமான 4 வருடங்கள் . அந்த 4 வருடங்களுக்கு மட்டும் என்னை என் பெற்றோர் மெப்கோ கல்லூரிக்குத் தாரைவார்த்து கொடுத்தார்கள் , மகன் ஒரு பொறியாளனாய் வெளிவருவான் என்ற நம்பிக்கையில். அங்கு நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்றை இங்கு பதிவுசெய்கிறேன் .
பொதுவாக எங்கள் கல்லூரி உணவு மிகவும் நன்றாக உள்ளது என்று பல விடுதி மாணவர்கள் சொல்லக்கேட்டுருகிறேன்.ஆனால் எனக்கு உணவு சுத்தமாகப் பிடிக்கவில்லை.சில மாணவர்கள் மொக்க பொங்கலைக் கூட மூன்று நான்கு முறை வாங்கி அதில் சட்னியையும் சாம்பாரையும் அபிஷேகம் செய்து ஒரு கலை நயத்தோடு உண்பார்கள். ஏனோ! இந்த நாகர்கோயில் நாக்கிற்கு மட்டும் உணவு பிடிக்கவில்லை .என்றெல்லாம் பிடிக்காத உணவு போடுகிறார்களோ அன்றெல்லாம் எனக்கு காக்கும் தெய்வமாய் நினைவுக்கு வருவது சிவகாசியில் உள்ள விஜயம் மற்றும் அப்பன் மெஸ் தான். விலை குறைவு ! நல்ல சுவை !! இது போதாதா ! நண்பர்கள் கூட்டத்தோடு சிவகாசி பயணம் தான்.
மேற் குறிப்பிட்ட கிழமை மற்றும் நேரம். நானும் எனது நெருங்கிய நண்பன் மதனும் வெளியே சென்று உணவு உண்ணலாம் என்று முடிவு செய்தோம் .எங்கள் கல்லூரியில் உள்ள விதிமுறைகளுள் ஒன்று மாணவர்கள் அனைவரும் இரவு 8 மணிக்குள் விடுதிக்கு வந்துவிட வேண்டும். நானும் மதனும் கல்லூரியின் வெளியே 1.5 மைல் தொலைவில் உள்ள தெருமுனை ஹோட்டலுக்கு சென்று சாப்பிடலாம் என்று கல்லூரியயை விட்டு கிளம்பினோம் .அப்போது மணி 8.14 . வெளியே சென்று பார்த்த இருவருக்கும் ஏமாற்றம்.அன்று அந்த இரு ஹோடேல்களும் ஏதோ ஊர் திருவிழா காரணமாக விடுமுறை . நான் மதனை நோக்க! மதன் என்னை நோக்க ! இருவரும் எதிரே "சிவகாசி" என்று எழுதப்பட்ட பலகையை நோக்க! ஏறினோம் சிவகாசி பேருந்தில் . பயம் சிறிது என்னை ஆட்கொண்டது .கல்லூரி திரும்ப எப்படியும் 2 மணி நேரம் ஆகும் . இதை மதனிடம் தெரிவிக்க அவன் "விடு மச்சி ! இதெல்லா சப்ப மேட்டர் ! நம்ம final year மாமூ ! இதுக்கெல்லாம் பயப்படலாமா ? என்றான் . ஆகா !! நம்மோடு ஒரு வீரன் இருக்கிறான் என்ற தைரியத்தோடு அப்பன் மெஸ் உணவைப் பற்றி கனா காண ஆரம்பித்தேன் .வாரத்தின் ஏழு நாட்களுக்கு மட்டும் சுத்த அசைவம் சாப்பிடும் பழக்கம கொண்ட நாங்கள் இருவரும் உணவை பேருந்திலேயே தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தோம் . இறுதியில் அடைந்தோம் அப்பன்சை ! உண்டோம் "சுத்த அசைவம் " ! அடைந்தோம் "பரவச நிலை ". கல்லூரிக்குத் திரும்புகையில் பயம் மீண்டும் என்னைப் பற்றிக் கொண்டது .ஒவ்வொரு மைல் கல்லை பார்க்கும்போதும் பயம் வேகமாக முன்னேறிக்கொண்டு இருந்தது . கல்லூரி நிறுத்தத்தில் இறங்கியதும் "நீ இன்னைக்கு தர்ம அடி வாங்க போரே !” என்று ஒரு அசிரிரீ எனக்குள் .
கல்லூரி வாயிலை அடைந்தோம் . காவலர் "என்னபா!! பத்து நிமிஷத்துல வந்துருவோம்ன்னு சொல்லிட்டு போனீங்க . இப்ப மணி என்னை தெரியும்ல ? " என்றார் . மதன் "மணி பத்து! " என்றான் . "நீங்கல்லாம் ஆஸ்டேல் ல போடுற சாப்பாட்டை சாப்ட மாடீங்களா " என்றார் காவலர் சிறிது காட்டமாக !
நான் பதிலேதும் பேசாமல் நின்றேன் .உடனே மதனின் உள்ளிருந்த சிவகங்கை சிங்கம் என்ற வீரன் எம்பிக்குதித்து வெளியே வந்து "ஆஸ்டேல் ல போடுற சாப்பாடு நல்லா இருந்த நாங்க ஏன் வெளியே போய் சாப்புடுறோ!" என்றான் . எனக்கு சின்ன அதிர்ச்சி .காவலர் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. சிறிது கோபமுற்றார். "ஒஹோ! மூணு வருஷமா இந்த சாப்பட தான சாப்டீங்க ! நாலாவது வருஷம் மட்டும் பிடிக்காமா போச்சா ! எல்லாம் final year கிற திமிரு " என்றார் .வார்டேன் கிட்ட சொன்ன என்ன ஆகும் தெரியும் ல !" என்று உறுமினார் . ஒன்றும் பேசவில்லை இருவரும் .register ரில் கையொப்பம் இட்டுவிட்டு ஆஸ்டேல்லை நோக்கி விரைந்தோம் .
மதன் என்னைப் பார்த்து "டேய் ! மச்சி ! இந்த watchman ல நம்மள HOD மாதிரி கேள்வி கேக்குறான் பாரு !! எல்லாத்தையும் போட்டு தள்ளனும் டா ! " என்றான் . நான் அவனை ஆமோதிக்கும் வகையில் "விடு ! மாப்ள ! சில்ற பசங்க " என்றேன் ." இல்ல மச்சி ! இந்த வார்டேன் பயலுக்கு ஒரு நாள் மண்டையில நாலு ஆக்கர் போட்ட தான் சரிபட்டுவருவான் டா " என்றான் மிகுந்த ஜெர்கோடு. இருவரும் பலமாக சிரித்தோம் .ஆஸ்டேல் வாசலை அடைந்த இருவருக்கும் அதிர்ச்சி . வாயிலில் அய்யனாரையும் ,பிள்ளையாரையும் கலந்து செய்த கலவையாக Deputy வார்டேன் ஆஜானுபாகுவாய் நின்று கொண்டிருந்தார் ."என்ன பா ! இவளோ நேரம் எங்க போயிருந்தீங்க ! மணி பத்து ஆச்சு ! " என்று கேட்டார் . இருவருக்கும் வாரத்தை வரவில்லை . "சொல்லுங்க பா ! வாயில என்ன கொலகட்டயா ?" என்று மிரட்டினார். " இல்ல சார் ! சிவகாசிக்கு சாப்ட போனோம் !" என்றேன் ."ஒஹோ! துரைங்க இங்க சாப்ட மாடீங்க . அமைதி ஆட்கொண்டது இருவரிடமும் ."

"என்ன சாப்டீங்க " என்றார் .
"பட்டர் சிக்கன் , போரோடா !" என்றான் மதன்
"எவளோ பில் ? " என்றார்.
" 112 ரூவா " என்றேன் .
"அப்போ ஒருத்தர் 56 ரூபாய்க்கு சாபபிடுருகுறீங்க " என்று தனது கணித திறமையயை காட்டினார். இங்க ஆஸ்டேல் ல ஒரு நாளைக்கு சாப்பாடு 23 ரூபாய்க்கு போடுறோம் . நீங்க பணதிமிருல இதெல்லாம் சாப்பிட மாடீங்க " என்று இல்லாத ஒன்றை இருப்பதாக சொன்னார் ."ஆமா ! place ஆகிடீங்களா ? " என்றார் . உடனே மதன் "அவன் place ஆகிட்டான் . நான் இன்னும் ஆகல " என்றான் மிக பவ்யமாக (பம்மலாக) .
"எந்த கம்பெனி ?" என்றார்.
"HCL" என்றேன் .
" உங்க ரெண்டு பேர்ல "இங்க போடுற சாப்பாடு எல்லாம் மனுஷன் சாப்டுவானா ? " என்று watchman கிட்ட சொன்னது " என்றார் .
"ஆகா ! watchman வேலையயை காட்டிவிட்டார் " என்று இருவரும் மனதில் நினைத்துக் கொண்டோம் .
வார்டேன் இருவரையும் சற்று உற்று நோக்கினார் . "எனக்கு "நீ தான் அப்படி சொல்லிருப்பேன்னு தோணுது " என்று என்னை நோக்கி கைநீட்டினார் . எனக்கு பெரும் அதிர்ச்சி .உடனே மதனை நோக்கினேன் . அவனோ "SHREK" படத்தில் வரும் பூனை போல முகத்தை பாவமாக வைத்துக் கொண்டான் .
"எந்த ஊரு நீ? " என்னிடம் .
"நாகர்கோயில் " என்றேன் .
"அது தான பாத்தேன் ! அந்த ஊருக்குள்ள திமிரு உன்கிட்ட இருக்கு " என்று சொல்லி என் ஊரையும் கேவல படுத்தினார். " நீயெல்லாம் வாழ்நாள்ல சாப்பாடுக்கு கஷ்டப்பட போரே பாரு ! போ போ ! " என்றார். "இது கலி காலம் சார் ! பத்தினி சாபமே பலிக்காது ! உன்ன மாதிரி பன்னியின் சாபமா பலிக்க போகிறது போடா ! " என்று உறுமினேன் மனதிற்குள் . இருவரும் தங்களது அறையை நோக்கி சென்று கொண்டிருந்தோம் சிறிது கவலையோடு . உடனே மதன் "விடு மச்சி ! அவன் ஒரு டிஞ்சர் வாயன் ! இதுக்கு மேல ஒரு வார்த்த பேசிருந்தான் அவன் மண்டையில ஒரு ஆக்கர போட்ருபேன் " என்றான் . "அட பாவி ! நாப்பது நிமிஷம் நம்மகிட்ட ரம்பம் போட்டான் ! . நீ ஒரு வார்த்த கூட பேசல ! வெளியிலே ஜெர்க் க பேசிட்டு ! உள்ள செம பம்மு பம்மிட்டு ! இப்போ மறுபடியும் ஜெர்க் க " என்றேன் . " விடு மச்சி ! சப்ப மேட்டர் ! ப்ரீயா விடு !ப்ரீயா விடு" என்றான் . மீண்டும் பலத்த சிரிப்புடன் அவரவர் அறையை அடைந்தோம். Download As PDF