Friday, August 7, 2015

ஓர் இரவு,ஓரு பெண்,ஓரு பேருந்து.

இடம் : ஏபிடி Travels சூப்பர் டீலக்ஸ் ஏசி பேருந்து.

நேரம் : மாலை 5.49

கிழமை : திங்கள்

ரம்ஜான் விடுமுறைக்காக நான்கு நாட்கள் எனது சொந்த ஊரான நாகர்கோவிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பெங்களூர் திரும்பிக்கொண்டிருந்தேன். எனது வீட்டிலிருந்து ஆட்டோவில் ஏறி எனது தாய் தந்தையருக்கு டாட்டா காட்டிவிட்டு தனியார் பேருந்து நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தேன் 15 நிமிஷப் பயணம். பேருந்து நிலையத்தில் ABT பெங்களூர் பஸ் ஜபர்தஸ்தாக நின்றுக்கொண்டிருந்தது.. எனது கைபேசியில் "A" என்ற எண்ணை அழுத்தி "ஹலோ!!! நா பிரவின் " என்றேன். "ஆ! சொல்லுப்பா பஸ் ஸ்டாண்ட் போய்டியா " என்றார் என் தந்தை. "ஆமா ! இப்பதான்!" என்றேன்." இந்தா அம்மா பேசுதா " என்று சொல்லி என் அம்மாவிடம் போனைக் கொடுக்க "ஹலோ !! சொல்லும்மா !" என்றேன்." நல்ல சாப்டுப்பா!! " என்றார் என் அம்மா."ஹ்ம்ம் ! பாத்துகிறேன் " என்றேன். " இனி எப்போ வருவே "என்று கேள்வி வர சிறிது கடுப்பாகி "யம்மா ! இப்ப தான போறேன் ! வருவேன் அடுத்த மாசம் போதுமா!" என்றேன். " ஆ! சரி ! அப்போ போன வச்சிரவா" என்றார்." ஹ்ம்ம் !" என்று பதில் சொல்லிக்கொண்டே பஸ்ஸில் ஏறினேன்.
பஸ்ஸில் நடுவில் ஜன்னல் ஓர சீட்டில் ஒரு பெண் இருப்பதைப்போல் தோன்றியது. வேறு எவரும் பஸ்ஸில் இல்லாததால் அப்பெண் தனியாகத் தெரிந்தாள். எனது கண்கள் சிறிது அகலமாகி தனது குவித்திறன் அனைத்தையும் அப்பெண் மீது செலுத்தியது. இருந்தாலும் கண்டும் காணாததுமாக எனது சீட்டை தேடினேன்."16,17,18" 18 எனது சீட். அப்பெண் அமர்ந்திருப்பது சீட் நம்பர் 19. அருகில் சென்று உற்று நோக்க "ஐயோ !! அய்யய்யோ ! ஐயோ !! அய்யய்யோ ! " என்ற தமிழ் பாடல் கற்பனையாக ஓலிக்க எனக்கு மட்டும் பனிக்கட்டி மழை பெய்தது. அப்பதுமை மிக மிக அசாதாரண அழகு. பனியில் குளித்த ரோஜா மலரைப் போல பிங்க் நிறத்தில் மின்னினாள். பார்ப்பதற்கு தமிழ் பெண் போல தெரியவில்லை.கண்டிப்பாக வடநாட்டுப் பெண் என்பதை அவள் முகம் சொல்லியது. ஒரு பிங்க் நிற T - ஷர்ட் , நீல ஜீன்ஸ் பேன்ட், ஒரு ஜெர்கின் அணிந்திருந்தாள். காதில் ஒரு I-POD , கையில் ஏதோ புத்தகம் வைத்து படித்துக்கொண்டிருந்தாள். இவை அனைத்தும் காண நேர Scanனில் கிடைத்த அற்புதத் தகவல்கள். சற்று இயல்பு நிலைக்குவந்தாலும் சிறிது பதற்றத்துடன் "Well ! May I sit here? " என்று ஒரு பீட்டரோடு ஆரம்பித்தேன். அவள் தனது I-POD யை காதில் இருந்து விலக்கி "வாட் ?" என்று கேட்க , "May I sit here?" என்றேன் மீண்டும். நீங்கதானே இந்த சீட் புக் பண்ணிருக்கீங்க?"என்று எனது கேள்வி அம்பை வளைத்து இன்னொரு கேள்வியாக என்னிடம் ஏவினாள். அட பொண்ணு நல்லா தமிழ் பேசுதே !" என்று மனதில் எண்ணிக்கொண்டு,"இல்ல ! நான் இங்க உக்காந்தா உங்களுக்கு ஒன்னும் ப்ரோப்லேம் இல்லையே?" என்றேன்."I dont have any ? Do you ? " என்று அமெரிக்க ஆக்சன்ட்டுடன் ஒரு கேள்வி மீண்டும். "ஓகே ! நோ ப்ரோப்லேம்" என்று முடித்துக்கொண்டேன். எனது பையை மேல வைத்துவிட்டு பஸ்ஸை விட்டு கீழே இறங்கி சிறிது வெளியே உலாவலாம் என்று நடந்தேன். " டேய் பிரவினு !! பொண்ணு செம Bold போல தெரியுது !! நீ Bold ஆகிடாதே!! Be careful" என்று மணி அடித்தது என் மனசாட்சி. சரி இப்பொழுது இந்த விஷயத்தை நண்பர்கள் யாரிடமாவது சொல்லவேண்டுமே என்று எண்ணி என்து நண்பன் "ராஜு" வை இந்த வயித்தெரிச்சலுக்கு தேர்ந்தெடுத்து அவனை என் கைபேசியில் இருந்து அழைத்தேன்."என்னடா ! ராஜு ! என்ன பண்றே? " என்றேன். " இல்ல மச்சி ! செம tired அதான் தூங்கிட்டு இருக்கேன் " என்றேன்."ஒ ! மச்சி இப்போ தான்டா ஊருக்கு கிளம்பீட்டு இருக்கேன்." என்றேன். "ஒ ! எப்போ வருவே ?" என்றான். "நாளைக்கு காலைல வந்துருவேன் டா" என்று சொல்லி " மச்சி ! இன்னொரு விஷயம் ! பஸ்ல என் சீட்டுக்கு பக்கத்துல ஒரு செம பிகர் டா " என்று சொன்னது தான் தாமதம் எதிர்முனையில் ஒரு சிறு அதிர்வு . நான் நினைத்ததை விட அவன் வயிறு 5 டிகிரி அதிகமாவே எரிந்தது . " "என்னடா சொல்ற "என்றான். " உண்மையிலே மச்சி ! சூப்பர் பொண்ணு டா !" என்றேன்." டேய் மச்சி கலக்குடா !! நீ ரொம்ப குடுத்து வச்சவேன் டா . கண்ணுக்கு தெரியாம ஏதோ ஒரு உச்சத்துல ஒரு மச்சம் இருக்குடா உனக்கு !" என்றான். " மச்சி ! நம்மெல்லாம் "TERROR" தெரியும்ல ! எந்த பொண்ணுக்கும் அசர மாட்டோம் " என்று ஜெர்குடன் பேசினேன். " நிறுத்துடா ! உன் சவடால ! நீ பாப்பநாயக்கன் பாளையத்து பாட்டிய பாத்தாலே பம்முவ ! இப்போ பளிங்கு மாதிரி ஒரு பொண்ணு பக்கத்துல இருக்கு !! பாவம்டா அந்த பொண்ணு " என்றான். " டேய் ! மவனே ! ரொம்ப பேசாதே ! நா travel ல இருக்கேன் போன் பண்ணி disturb பண்ணாதேன்னு சொல்றதுக்கு தான் போன் பண்ணேன். இப்போ போன வச்சிடுறேன்"என்றேன். " எலேய் !! நடத்துடா ! நடத்து !" கடைசில நீ இங்க தா வந்தாகணும் " என்று தொடர்பை துண்டித்தான்.
சிறிது முடியை சரிசெய்து கொண்டு பஸ்சிற்குள் ஏறினேன். பேருந்து நிறைந்து இருந்தது. நேராகச் சென்று எனது சீட்டில் அமர்ந்தேன். அப்பெண் ஒரு சிறு கண் சிமிட்டல் கூட இல்லாமல் புத்தகத்தை குறுகுறுவென்று உற்று நோக்கிப் படித்துக்கொண்டிருந்தாள். சற்று குனிந்து புத்தகத்தின் பெயரை நோக்கினேன் "La habitación de Fermat" என்று எழுதியருந்தது. என்ன மொழிப் புத்தகம் என்று எட்டிப் பார்க்க அது ஆங்கிலப் புத்தகமில்லை என்று மட்டும் தெரிந்தது. ஓகோ ! மேடம் Multilingual போல ! என்று நினைத்துக்கொண்டேன்.ஆனால் அப்புத்தகத்தின் பெயர் எனக்கு சிறிது பரிட்சயமான பெயர் போலத் தோன்றியது. பேருந்து பெங்களூர் நோக்கி விரைந்தது. முதல் 2 மணி நேரம் இருவருக்கும் இடையே ஒரு மயான அமைதி. பேருந்து விருதுநகரை அடைந்தது. மகிழ்ச்சியாக ஜன்னல் வழியே வெளியில் நோக்கினேன் சிறிது ஆர்வத்தோடு. அப்பெண் எனது நடவடிக்கைகளை நோக்கி , தனது I-POD யை காதில் இருந்து விலக்கி,"wat happend ? எதாச்சி ப்ரோப்லேம்மா? இப்படி வெளியே பாக்குறீங்க!". அதெல்லாம் ஒண்ணுமில்ல ! இங்க தான் நாலு வருஷம் முன்னாடி நான் இன்ஜினியரிங் படிச்சேன்" என்றேன். " Oh ! so you are not a student now ?" என்று சொல்லிச் சிரிக்க ஆரம்பித்தாள். ஆகா ! நம்மள சின்னப் பையன் லிஸ்ட் ல சேர்த்து டா போல " என்று மனதில் நினைத்துக்கொண்டு ,"நோ ! நோ ! நா பெங்களூர் ல சாப்ட்வேர் Enginer " என்றேன். " இஸ் இட் ? Big Job ! Big Money ! !" என்றாள். நான் பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தேன். " நீங்க நாகர்கோவிலா ?" என்று முதல் நங்கூரத்தை நாட்டினேன். "இல்ல ! My native is " சொல்லி நிறுத்திக்கொண்டு " ஹ்ம்ம்!! I m அஞ்சனா ! நா பெங்காலி. அம்மா நாகர்கோவில். அப்பா கொல்கத்தா. பெங்களூர் ல பேஷன் டிசைன் படிச்சிட்டு இப்போ மைசூர் ல AD கம்பெனில வொர்க் பண்றேன். இப்போ பாட்டியை பார்க்க நாகர்கோவில் வந்தேன்.." அப்புறம் ! என்று ஆரம்பித்து இடைவிடாமல் அரைமணிநேரம் அவளது பள்ளி,கல்லூரி,தோழிகள்,ஆண் நண்பர்கள் என்று அவளது குறும் வரலாற்றை சொல்லி முடித்தாள். அவளை பற்றி சொல்லும் போது அவளது கண்கள் விளையாடின. கைகளோ ! காற்றில் அபிநயம் புரிந்தன. எனக்கோ அவள் கூறிய "I m அஞ்சனா ! நா பெங்காலி " தவிர வேறு எந்த வார்த்தையும் காதில் விழவில்லை. காரணம் அவளின் அழகு. "இப்போ நீங்க சொல்லுங்க " என்று போட்டாள் ஒரு பிரேக். நான் என்னைப் பற்றி சொல்ல ஆரம்பிதேன். சொல்லிகொண்டேயிருகையில் "ஜஸ்ட் எ min! தமிழ் நாடு ரொம்ப ஹாட் யார் !" என்று சொல்லிக்கொண்டே அவள் ஜெர்கின்னை கழற்றினாள். நானும் " ஆமா !! ரொம்ப ஹாட் தான் " என்று எனது ஜெர்கின்னை கழற்றினேன். 2 வினாடி கழித்து "அடப்பாவி ! இருக்கிறது AC பஸ்... !! தமிழ்நாடு ஹாட்டா ? அவ சொன்னங்கிறதுக்காக தமிழ்நாட்ட கவுத்துபுட்டயேடா !" என்று மணி அடித்து என் மனசாட்சி இரண்டாம் முறை. ஆம் ! அழகான பெண் அருகில் இருக்கையில் அது ஆண்டவனாக இருந்தாலும் அவனது ஆறு அறிவும் வேலை செய்யாது என்பது ISI முத்திரைக் குத்தப்பட்ட அக்மார்க் உண்மை. நான் மட்டும் என்ன விதிவிலக்கா ?" மீண்டும் எனது உரையாடலைத் தொடர்ந்தேன். ஒருவாறாக என்னைப்பற்றி சொல்லிமுடித்தேன். " சோ ! உனக்கு puzzles நா Interest " என்றாள். " ஆமா !! " என்றேன். "ஓகே ! அபோ ஒரு சின்ன கேம் . இந்த ஸ்பானிஷ் ஸ்டோரி புக்ல 5 puzzles இருக்குது . நீ answer பண்றயா பாப்போம் " என்றாள். ஆப்பைத் தேடி அருமையாக அமர்ந்துகொண்டாயேடா பிரவினு ! தமிழ் விடுகதை கேட்டாலே தடுமாறுவே ! இதுல ஸ்பானிஷ் வேற இன்று நமக்கு சங்கு தான் " என்று ஒரு எண்ணம். " ஓகே ! அந்த புக்க ஒரு நிமிஷம் குடுங்க " என்று வாங்கி திறந்துப் பார்க்க "FERMAT"S ROOM " என்று மட்டும் ஆங்கிலத்தில் எழுதிஇருந்ததை பார்த்தவுடன் எனது மூளையில் 1000 watts பல்பு எரிந்தது. இப்படத்தை நான் முன்பே பார்த்திருக்கிறேன். "ஹ்ம்ம் !! கடவுள் இருக்கான் குமாரு !!" என்று மனதில் நினைத்துக்கொண்டு சிரித்தேன். பேருந்து ஒரு இடத்தில சற்று நின்றது." டீ !! காபி ! சாப்டறவங்க சாப்டலாம் ! வண்டி காமணிநேரம் நிக்கும் " என்று கூவினான் ஒரு சிறுவன். " ஹே !! மொடேல் வந்துடுச்சி ! காபி சாப்டலாமா ?" என்றேன். " ஓகே ! " என்றாள். கீழே சென்றோம். "டீயா ? காபியா ?" என்றேன் . " டீ " என்றாள். " அண்ணா ! ஒரு டீ , ஒரு காபி !" என்று கூறி திரும்பிய எனக்கு அதிர்ச்சி. அவள் புகைவண்டிபோல் புகை விட்டுக் கொண்டிருந்தாள். இதனை சற்றும் எதிர்பார்க்காத நான் டீயை வாங்கி அவளிடம் கொடுத்தேன். "ஹே !! யு வான்ட் " என்று சிகரட்டை என்னிடம் நீட்டினாள். " எனக்கு பழக்கமில்லைங்க !" என்றேன். எனது கைபேசி அதிர்ந்தது. ராஜு calling . சிறிது தூரம் தள்ளி சென்று " சொல்றா ராஜு" என்றேன். " என்னடா நடக்குது அங்க ?" என்று அவன் வினவ " ஹ்ம்ம் !! சிவபூஜை நடக்குது ! சோ " என்றேன். சிறிது கடுப்பாகி . அப்போ என்ன கரடின்னு சொல்லாம சொல்றயா ? " என்றான் . " மச்சி உனக்கு கற்பூர புத்திடா அப்போ நீ கண்டிப்பா கழுதை இல்ல ! " என்று சொல்லி சிரிக்க ."நல்ல இருடா ! நல்ல வாழு !" என்று தொடர்பைத் துண்டித்தான். மீண்டும் அவளை நோக்கிச் சென்றேன். சிகரெட் முழுவதுமாக முடிந்திருந்தது. "ஹே ! நா போய் சாக்லேட் வாங்கிட்டு வரேன் " என்று சொல்லிக்கொண்டு இரண்டு Diarymilk வாங்கி வந்தாள். " யு டேக் ஒன் " என்று என்னிடம் நீட்டினாள். " இல்லைங்க ! சாக்லேட் பிடிக்காது " என்றேன். இந்த பதில் அவள் சிகரட் புகைத்ததைக் கண்டத்தின் வெளிப்பாடு. பேருந்து மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்தது. போட்டியும் ஆரம்பமானது. அவளின் முதல் கேள்வி மூன்று பல்பு பற்றியது. எனக்கு முன்னரே தெரிந்த விடையை சொல்லத் தயாரானேன். எனது சிறு மூளை சிறிது சிணுங்க எனக்குள் ஒரு எண்ணம். " பெண்கள் விரும்புவது முதல்முறை மட்டும் தோற்கும் ஆண்களையே தவிர எப்போதும் தோற்கும் ஆண்களை அல்ல !" என்று யாரோ ஒரு "பெண்"மீகவாதி உதிர்த்த தத்துவம் ஞாபகம் வர சிறிது யோசிப்பதை போல் பாவலா செய்து விட்டு "ஹ்ம்ம் !! நோ ஐடியா " என்று சொன்னது தான் தாமதம் . அவளுக்கு பெரும் மகிழ்ச்சி . ஆண் வர்க்கத்தையே தோற்கடித்தது போல பலமாகச் சிரித்தாள்." ஓகே ! I will tell the answer " என்று விடையை சொன்னாள். கேள்வி இரண்டு ஆரம்பமானது. மீண்டும் சிறு யோசனையோடு சரியான பதிலைச் சொல்ல அவள் முகம் சுருங்கி சிவந்தது. எனினும் "ஹே ! குட் யார் !! ரைட் answer " என்று சொல்லி மாற்ற கேள்விகளையும் கேட்க அனைத்திற்கும் சரியான பதில் அளித்தேன். இறுதியில் " ஹே ! you are good in Puzzles " என்றாள்." தேங்க்ஸ் ! பாய்ஸ் ஆர் பாய்ஸ் !" என்று காலரை தூக்கினேன் . உடனே கல கலவென சிரித்தாள். எனக்கோ தமிழ் நாட்டின் மானத்தையே காத்த மாதிரி ஒரு பெருமிதம். உரையாடல் தொடர்ந்தது. திடீரென்று மணி பார்க்க "4.30" என்று காட்டியது. ஆகா !! இன்னும் 2 மணி நேரத்தில பெங்களூர் வந்துருமே கொஞ்ச நேரம் தூங்கலாமா ! என்று எண்ணி " ஹே ! உங்களுக்கு தூக்கம் வரல ? " என்றேன். " என்ன ! உனக்கு இப்போ தூக்கம் வருதா ?" என்றாள் மிக மரியாதையுடன். " ஆமா ! என்று சொல்லி பல் இளித்தேன். " ஓகே ! Really Had a nice time with you ! wats ur contact number பிரவின் ?" என்றாள். நம்பர்கள் பரிமாறிக்கொண்டோம். "சரி நீ தூங்கு ! நானும் தூங்குறேன் " என்றாள்.
காலை மணி 06.35 பேருந்து பெங்களூரை அடைந்தது. நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது." ஓகே அஞ்சனா ! will meet sometime later " என்றேன்." sure ! Ring me when you get some time " என்றாள். " Bye சொல்லிவிட்டு எனது வீட்டை நோக்கிச் சென்றேன். வீட்டை அடைந்தவுடன் ஜெர்கினை கழட்டற உள் பையில் ஒரு DiaryMilk இருந்தது . அதனுடன் ஒரு தாள் " To a Nice Chap " என்று . சிறிது புன்முறுவல் பூத்தேன். மீண்டும் கைபேசி "ராஜு calling ". "சொல்றா ராஜு ! காலையில இருந்து உனக்கு எவளோ நேரம் ட்ரை பண்றேன் தெரியுமா " என்றேன், " மண்ணாங்கட்டி ! என்னலாம் பேசினடா நேத்து நைட்" என்றான் காண்டாக. " என்னடா மச்சி இப்படில பேசுற !! யு ஆர் பெஸ்ட் Friend da " என்று சொல்லி சிரித்தேன். எதிர்ப்பக்கம் சிறு அமைதி . சரி சீக்கிரம் ரெடி ஆயுடு ஆபீஸ்ல மீட்டிங் இருக்குது " என்றான். " Thats குட் பாய் !! இன்னும் பத்து நிமிஷம் ரெடி ஆயுடுவேன்" என்றேன். " சரி அந்த பொண்ண ஒரு போட்டோ எடுத்தியா டா ! " என்று கேட்டான். " போடா ! @#%& ! காலங்காத்தலயே உனக்கு என் வாயால சுப்ரபாதம் கேக்கணுமா " என்று ஆரம்பிக்க , " சரி ! விடு ! சீக்கிரம் ரெடி ஆகு" என்று சிரித்துக் கொண்டே போனை வைத்தான்.

பி.கு : இந்த பதிவினை அஞ்சனாவின் அனுமதி பெற்ற பிறகே வெளியிடுகிறேன்.... அவளுக்கு தமிழ் படிக்கத்தெரியாது என்ற அசாத்திய நம்பிக்கையில் ...!!
Download As PDF

Thursday, August 7, 2014

தலைவலி



"மஞ்சள் வெயிலில் பறவைகள் தம் கூடு நோக்கிப் பறக்கின்றன." ஹ்ம்ம்.. இவ்வாறா ஆரம்பிப்பது? வேறு எவ்வாறு ? எவ்வாறு வேண்டுமென்றாலும் ஆரம்பிக்கலாம் என்று பிரபல எழுத்தாளர் ஒருவர் கூறியுள்ளார். இன்னொருவரோ இவ்வாறெல்லாம் ஆரம்பிக்கக் கூடாது என்று 10 கட்டளைகள் இட்டுள்ளார்.

இப்போது எனக்கிருக்கும் ஒரே பிரச்சனை கதையை ஆரம்பித்தல் அல்ல. இந்த தலைவலி தான். அதுவும் ஒற்றைத் தலைவலி. சரியான நேரத்தில் வந்துவிட்டது எதிர்பார்த்தபடியே. இல்லையென்றால் எனக்கு காய்ச்சல் வந்திருக்கும். எனது மேஜையின் மீது காகிதங்களும், கையில் பேனாவும், அருகில் ஒரு சாரிடான் மாத்திரையும் இருக்க ஏதோ எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

சாரிடான் இதுவே வலிநிவாரணி. வேறதையும் இவ்வுடம்பு ஏற்க மறுக்கிறது என்ன செய்வது. தலைவலியை விட தலைவலி மாத்திரை அளித்த வலி இன்னும் மனதில் அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருக்கிறது. மாத்திரை வாங்கிவரலாம் என்று கடைக்குச் சென்றால் "என்ன சார்! பார்த்து ரொம்ப நாளாச்சு! ஊர்ல இல்லையா ? " என்றார் கடைக்காரர்.

என்னை தினமும் எதிர்பார்ப்பார் போல. இருந்தாலும் ஒரு மருந்துகடைக்கு அடிக்கடி வருவது உடல் நலத்திற்குக் கேடு. ஆனால் மதுபனைக் கடைக்கு தினமும் செல்கிறேன். அது வீட்டிற்கும் நாட்டிற்கும் உயிருக்கும் கேடு. நாட்டைப் பற்றி என்னவொரு அக்கறை. எனினும்  மதுபானக்கடை செல்லவே மனம் விரும்புகிறது.  மருந்துகடைக்கு ? அது ஒரு சோக கதை விட்டுவுடுவோம் இப்பொழுது.

வலிதான் வெற்றிக்கு வழி. என்றாலும் வாழ்க்கை முழுவதும் வலியுடன் வாழ்ந்தால் வாழ்வதில் என்ன பயன். இப்பொழுது வெற்றியும் பிரச்சனை அல்ல.கதையை இன்னும் ஆரம்பித்த பாடில்லை.

இந்த ஒற்றை தலைவலியை மையாக்கி பேனாவில் நிரப்பி, தலைவலியின் அளவைப் பார்த்தால் பேனா தலைவலியினால் பொங்கி வழியும் என்றே தோன்றுகிறது. அதனால் பாதி தலைவலியினை மற்றும் மையாக்கி பேனாவில் நிரப்பி அதனைக் காகிதத்தில் கதையாய் ஓடவிடலாமா ? பின்னர் இந்த தலைவலி மாத்திரையை பொடியாக்கி அந்த தலைவலி எழுத்துக்களின் மீது மென்மையாக தூவி எங்கும் பரவவிட்டு  அக்காகிதத்தினைத் தலைவலிக்கு வலிக்காத வண்ணம் மெதுவாய் மடித்து அப்படியே விழுங்கிவிட்டால் ? தலைவலி மீண்டும் எனக்குள்ளேயே சென்று விடும் , இப்பொழுது தலைவலியும் அதன் நிவாரணமும் ஒரே இடத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து.

சரி எப்படியாவது ஆரம்பிப்போம். "யுகன் காலையில் எழுந்து பல் கூட துலக்காமல் செய்தி தாளினைப் புரட்டிக்கொண்டிருந்தான். வேலையில்லா  பட்டதாரி காலையில் எழுந்து செய்தி தாளினைப் புரட்டுவது இன்றியமையாதது." அடுத்து ..

"அடுத்தெல்லாம் ஒன்றுமில்லை . உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்" என்றொரு குரல் என் பின்னே. நான் திடுக்கிடவில்லை. இவ்வாறான குரல்கள் அடிக்கடி எனக்கு கேட்பதுண்டு. எல்லாம் இந்த தலைவலியால் வந்த வினை.

"உன்னிடம் தான் பேச வேண்டும்" என்றது குரல் மீண்டும்.

திரும்பிப் பார்த்தால் ஓர் இளைஞன் நின்று கொண்டிருந்தான். ஆஜானுபாகுவான உடல். எண்ணிப்பார்த்தால் உடலுக்கு ஏற்ற குரல் வாய்க்கபெற்றிருக்கிறான்.

"யார் நீ ? யாராக இருப்பாய்" என்று யோசிக்கலானேன்.

"நான் தான் யுகன் உனது எழுத்தின்படி என்னை பற்றிதானே எழுதிக்கொண்டிருக்கிறாய்? எழுத்து பொல்லாத எழுத்து எல்லாம் கிறுக்கல்."

"சரி இந்த நாற்காலியில் அமர்ந்து கொள். எனக்கு நிறைய வேலையிருக்கிறது"

"ஆமாம்! உனக்கு மட்டும் தான் நிறைய அலுவல் நாங்கள் எல்லாம் வேலை ஏதுமின்றி இருக்கிறோமா?"

நான் ஏதோ யோசித்தவாறே " கதைப்படி நீ வேலையில்லா பட்டதாரி அல்லவா? இன்னும் வேலையைத் தேடி நாயாய் பேயாய் அலைந்துகொண்டிருக்கிறாய் தானே?" என்று சிரித்தேன்.

"சீ ! வாயை மூடு . இன்று பல் துலக்கினாயா ?"

பல் துலக்க மறந்துவிட்டேன். இம்மறதி தலைவலியால் வந்தது." இல்லை . இக்கதையினை எழுதி முடித்தவுடன் பல் துலக்கவேண்டும் ஆனால் கதைப்படி நீயும் இன்னும் பல் துலக்கவில்லை தானே?. நீ ஏன் கருப்பு சட்டை அணிந்து வந்திருக்கின்றாய். கதைப்படி உனக்கு சிவப்பு சட்டையல்லவா அளிக்க எண்ணிகொண்டிருந்தேன்."

"உன்னிடம் ஒன்று கேட்கிறேன். என்ன நினைப்பில் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய். நீ எண்ணி எழுதுவதின் படிதான் நாங்கள் அனைவரும் வாழ வேண்டுமா ? நீ என்னை வேலையில்லாதவன் என்று எழுதினாய். நான் ஏதுமின்றி உணவுக்குக் கூட கையேந்துபவன் என்று சித்தரிப்பாய். பல் கூட துலக்கவில்லை என்று நீயே ஒரு முடிவை மனதில் கொண்டு சுவாரசியமாக்க ஏதோ உளறுவாய். இப்பொழுது நான் என்ன நிற ஆடை அணியவேண்டும் என்பதையும் நீயே முடிவு செய்கிறாய். தெரியாமல் தான் கேட்கிறேன் எங்களுக்கும் விருப்பம் இருக்ககூடாதா என்ன ?"

இவன் என்ன பேசுகிறான் . ஒன்றும் புரியவில்லை." யுகன் அவர்களே ! மிக மரியாதையாய் சொல்கிறேன். அமைதியாய் இருக்கவும். நான் உங்களிடம் வழக்காட விரும்பவில்லை. எனக்கு இக்கதையினை எழுதி முடிக்க வேண்டும். பொறுமையாய் இருக்க்க முடியுமென்றால் இருக்கவும். இல்லையென்றால் கதையை இன்னும் விபரீதமாய் எழுத வேண்டிவரும். தங்கள் விருப்பம் என்ன?"

"என்ன மிரட்டுகிறாயா? உனது பேச்சில் ஆணவம் கொஞ்சம் அதிகப்படியாய் இருப்பது உனக்கு புரிகிறதா? கதைகளில் அன்பு, பொறுமை , தியாகம் , அடக்கம் என்று என்னென்னவோ எழுதுகிறாய். சரியாகச் சொல்லப்போனால் போதிக்கிறாய். அதைப் படிப்போர் உள்ளம் உருகவேண்டும். கண்ணீர் கசிய வேண்டும். இதெல்லாம் உனது கதைகளின் போக்கு . ஆனால் நிஜத்தில் நீ ஒரு போலி., எத்தனைக் கதைகளில் எத்தனை மனிதர்களை கொன்றிருப்பாய்? அவர்களின் நிலையினை அவர்களைச் சார்ந்தவர்களின் நிலையினை ஒரு கணமேனும் எண்ணியிருப்பாயா?"

"இப்பொழுது உனக்கு என்ன வேண்டும். எனக்கு எதுவுமே புரியவில்லை .தலைவேறு வலிக்கிறது. சொல்வதை நேர்படச்சொல்"

"ஏன் காதலியை திருப்பிகொடு"

"உன் காதலியா ?" சிரித்தேன் பலமாக.

"சிரிக்காதே ! என்னை கோபமூட்டதே! என்னை பற்றியும் என்றாவது எழுதுவாய். அன்று உன்னிடம் நேருக்குநேராக பல விடயங்களைக் கேட்க வேண்டும் என்று எண்ணி எண்ணிகொண்டிருந்தேன் அது இவ்வளவு விரைவாக நடக்குமென்று எதிர்பார்க்கவில்லை. அதற்கு நன்றி.

"இப்பொழுது மீண்டும் என்னை நன்றாகக் குழப்புகிறாய். யார் உனது காதலி ஏன் அவளைப் பற்றி என்னிடம் கூறுகிறாய்.?"

"உனக்கு அவளை நன்றாகத் தெரியும். அவள் வாழ்வினைச் சீரழித்தவன் நீதான். அதை உன்னிடம் தானே கேட்க முடியும்"

"தலைவலிக்கிறது. அவள் பெயர் என்ன ?"

"ருக்மணி"
"ருக்மணியா ? அப்பெயர் கொண்ட எந்த பெண்ணையும் எனக்கு தெரியாது"
"எனக்கு அவள் ருக்மணி. உனக்கு உன்னைப் பொறுத்தவரை அவள் லட்சுமி"
"லட்சுமியா ? ஆமாம் இப்பொழுது புரிகிறது. போன கதை எழுதும் போது கூட உன்னை போல என் வீட்டிற்கு வந்திருந்தாள். அமைதியாகவே நின்றாள். எதுவும் பேச முற்படவில்லை. ஆமாம் அவளை உன் காதலி என்கிறாய் ? புரியவில்லையே?"

"நானும் அவளும் வெகு காலமாய் உனது மனதில் இருந்து காதலிக்குக் கொண்டிருந்தோம்"

"எனது மனதிலா? எனக்கு தெரியாமலா?"

யுகன் சிரித்தவாறே "உனது மனதில் இருப்பதனைத்தும் உனக்கு தெரியும் என்ற எண்ணமா? அப்படி இருந்தால் அதனை மாற்றிக்கொள். அறியாமை உன்னிடம் நிரம்ப இருக்கிறது. ஒரு எழுத்தாளனுக்கு இவ்வளவு அறியாமை ஆகாது,. நீ ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொருவராக உள்ளேயிருந்து பிரித்து சென்றுகொண்டிருந்தாய்.
பலரைக் கொன்றாய். சிலரை சிரிக்கவைத்தாய். சிலருக்கு உனது விருப்பத்தினை அவர்கள் மேல் புகுத்தி அதுவே அவர்களது மகிழ்ச்சி என்று நீயே எண்ணிக்கொண்டு போலியாய் மனநிறைவடைந்தாய். நானும் ருக்மணியும் பயந்தவண்ணமே எங்கள் இருவரையும் பிரித்துவிட்டாய். மகிழ்ச்சிதானே ?"

"ஆனால் நான் வேண்டுமென்றே செய்யவில்லை"

"உன் கதையைப் படிப்பவர்கள் உன்னைபுகழ வேண்டும். அதற்காக எதையேனும் எப்படியேனும் எழுதலாம் என்றெண்ணி நீ இவ்வாறு கடிவாளமின்றி திரிகிறாய்"

"கதையில் ருக்மணி இறுதியில் மகிழ்ச்சியாகத்தானே இருந்தாள்"

"இன்னும் நான் பேசுவது புரியவில்லையா?. முதலில் என்னைவிட்டு அவளை பிரித்தாய். பின்னர் கதையில் ருக்மணியை அதாவது லட்சிமியை வேசியாகப் படைத்தாய். அதுவும் 49 பேருடன் இருந்த பெண்ணாகவும் , 50 வது ஆளாக ஒரு பெரும் பணக்காரரைத் தேடும் பெண்ணாகவும் சித்தரிதாய். என்னவொரு வக்கிரம் உனது மனதில். ஏன் இவ்வாறு செய்கிறாய்?"

"கதை தானே! என்றாலும் ௫௦வது ஆளாக ஒரு பெரும் அரசனை அல்லவா சேர்த்து வைத்தேன்"

"கதையா ? வெறும் கதையா ?  சரி ஒரு பேச்சுக்கு வைத்துகொள்ளுவோம். உனது தாய் , அல்லது சகோதரி பெயர்களில் ஒன்றினை மட்டும் ஒரு கதபாதிரத்திற்குச் சூட்டி இவ்வாறு சித்தரித்து கதை எழுது பாப்போம்"

"யுகனே ! அதிகம் பேசுகிறாய். "யுகன்" என்பது எனது விருப்பத்திற்குரிய ஒரு பச்சிளம் பாலகனின் பெயர். அவனது பெயரில் இருந்து கொண்டு இவ்வாறு கோபமூட்டும் படி பேசாதே"

"புரிகிறதல்லவா?"

" என்ன செய்ய வேண்டும் உனக்கு"

"எனது ருக்மணி எனக்கு வேண்டும்"

"தலை வலிக்கிறது. சரி!. கொஞ்சம் பொறு !"

அருகில் கிடந்த காகிதங்களில் கடந்த மாதம் எழுதிய "வேசி" கதையினை எடுத்தேன். கிழித்து,கிழித்து,கிழித்து முழுவதும் சுக்குநூறாய் கிழித்து யுகனிடம் அளித்தேன்.

"உனது ருக்மணி எனது லட்சுமி இப்பொழுது மீண்டும் உனது ருக்மணியே! போதுமா ?"

: மகிழ்ச்சி ! ஆனால் இதுமட்டும் போதாது"

"புரிகிறது. ஆக்க பொறுத்த நீ ஆறப்பொறு"

புதிய காகிதத்தினை எடுத்தேன். கதையை இப்படி ஆரம்பித்தல் சாலச்சிறந்தது.

"யுகனும் ருக்மணியும் தங்களது முதல் திருமண நாளினைக் கடற்கரையில் கொண்டாடத் தீர்மானித்து " என்று எழுதி " போதுமா ?" என்றேன் யுகனிடம்.

யுகன் அன்புடன் புன்னகைத்தான் முதல்முறையாக. அவனது கன்னத்தில் அழகு குழி. கதையில் அதையும் மறக்காமல் எழுதவேண்டும்.

"மிக்க மகிழ்ச்சி ! ருக்மணி காத்திருப்பாள். போகட்டுமா ?" என்றான் யுகன்.

"சரி...  எனக்கு லட்சுமி  அவளே உனக்கு ருக்மணி.  எனக்கு நீ யுகன் , ருக்மணிக்கு நீ யார் ? உனது பெயர் தான் என்ன?"

யுகன் சிரித்தவாறே " உனது விருப்பத்திற்குரிய குழந்தையின் பாலகனின் பெயர் தான் எனது பெயரும் . வருகிறேன்" எனக்கூறிச் சென்றான் யுகன்.

என்னை அறியாமல் தலைவலி காணமல் போனது. சரிடோனுக்கு இன்று வேலை இல்லை.  கதையை சீக்கிரம் எழுதி முடிக்க வேண்டும்.
Download As PDF

Thursday, January 31, 2013

முதற்பொய்




பொய்கள் அழகானவை. அற்புதமானவை. விபரீத விளைவுகளை அளிக்காத வரையில்.

விளைவுகளை அளிக்காத பொய்கள் நினைவில் தங்குவதில்லை

அவ்வாறு விளைவுகளை ஏற்படுத்திய பொய்களும் மனம் மறந்து பலகாலம் கடந்த பின்னும் தக்க தருணம் பார்த்து , நாம் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் நினைவினுள் இருந்து வெடித்து வெளியேறும் . அப்படிப்பட்ட ஓர் உணர்வு "அனுமானைப்" பார்த்தபொழுது எனக்குத் தோன்றியது.

பரபரப்பான காலைவேளை. நடக்கக்கூட இடமின்றி மக்கள் தமது தோள்கள் உரச உரச நடந்து கொண்டிருக்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அனுமானைக் கண்டேன் பல வருடங்களுக்குப் பிறகு.

கண்ட தருணம் என் நினைவுகள் பலகாலம் பின்னோக்கி ஓடி 5ம் வகுப்பு என்ற காலக்கல்லின் அருகில் நின்றவாறு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தது . அங்கே எனது பள்ளிக்கூடம். 5ம் வகுப்பு. குமரேசன் வாத்தியாரின் இடக்கையில் எனது வீட்டுப்பாடநூல். வலக்கையில் சிறுத்தையின் தோலினை போர்த்தியதை போன்ற வண்ணத்தில் சூடு போட்ட பிரம்பு .

"யாண்டே ! உங்கப்பட்ட கையெழுத்து வாங்கிட்டு வரல?" என்றார் ஆசிரியர் .

"மறந்துட்டேன்" என்று உண்மையைக் கூறினால் மறக்காமல் இருக்க 5 அடி கிட்டும். பிரம்பு  என் புட்டதைப் பதம்பார்க்கும். அவ்வயதில் உள்ளாடை அணியும் பழக்கம் கூட இல்லை . அடி ஒவ்வொன்றும் தான்  வந்து போன தடத்தை தவறாமல் விட்டுச்செல்லும்.

வேறேதும் காரணம் கூறவேண்டும் . அதாவது  நாப்பிளக்க "பொய்" உரைக்க வேண்டும். தொண்டையில் தேங்கிக்கிடக்கும் எச்சிலை ஒன்றுக்கு இரண்டுமுறை நன்றாக விழுங்கிக் கொண்டேன். "பொய்" உண்மையைப் போன்றே தூய்மையாய் வெளிவர வேண்டுமல்லவாஅது ஆசிரியரை நம்பச் செய்ய வேண்டுமல்லவா?

"எங்கப்பா ஊருக்கு போயிருக்கு சார் " என்றேன் .
"எப்போடே போனா ?"
"போனவாரமே போயிட்டு சார். இன்னும் வரல "
"உங்கப்பதானடே அந்த பெரிய பக்கடா மீசை வச்சிட்டு சிவப்பு சுசுகி பைக்ல வரும் "
"ஆமா சார் "

"அப்போ மயிராண்டி நீ பொய் தான சொல்லுக . நேத்து சாந்தரம் கூட கோட்டார் சுக்காப்பி கடை  பார்த்தேஎன்று கூறும் போதே அவரது முகம் கோபத்தின் உச்சத்தைக் காட்டதொடங்கியது.  நான் அடுத்த வார்த்தை சொல்ல வாய் திறக்குமுன் தனது கையில் இருக்கும் பிரம்புக்கு நன்றாய் வேலை கொடுத்தார்.

"போல ! வெளில போய்  நில்லு ! வாயில வருகிறது எல்லாம் புழுத்த பொய் " என்று வசை புரிந்து புத்தகத்தைத் தூக்கி வெளியே வீசினார்.

நான் அழுது கொண்டும் , அடி வாங்கிய இடங்களைத் தடவிக் கொண்டும் வெளியே சென்றேன் . அங்கு ஏற்கனவே "அனுமான்" அமர்ந்திருந்தான். அனுமானுக்கு அடிவாங்குவதும் ,வகுப்பின் வெளியே அமர்ந்திருப்பதும் புதிதன்று.

அழுதுகொண்டிருந்த என்னை உற்று நோக்கினான். " என்ன மக்கா  வலிக்கா ? பிள்ள அழாத என்ன " என்று அன்புடன் ஆறுதல் கூறினான் . நான் அழுதுகொண்டே மேலும் , கீழும் தலையாட்ட ஒரு கண்ணீர் துளி எனது காக்கி நிற நிக்கரின் வீழ்ந்து படர்ந்தது.

"கரையாத மக்கா ! உனக்கு ஒண்ணு சொல்லுகேன். அடுத்த தடவ அடி வாங்குறதுக்கு முன்னாடி நான் சொல்லித்தார மந்திரத்த சொல்லு என்னா . அதுக்க கூட அனுமாரையும் மனசுல நெனச்சிக்கோ , அப்புறம் பாரு அடி வலிக்கவே வலிக்காது என்னா. " என்று கூறி எனது காதில் மந்திரத்தை கூறினான். நான் இன்னும் பலமுறை அடிவாங்குவேன் என்பதை மிக தீர்க்கமாக அனுமான் நம்பியிருப்பான் போலும்.

" யோகி ராம் சுரத் குமாரே
  யோகி ராம் சுரத் குமாரே
  யோகி ராம் சுரத் குமாரே
  ஜெய குரு ராயா "

நான் மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்து மனதில் பதியவைத்துக் கொண்டேன்.

"அனுமார் " எங்க தாத்தா வாக்கும் . பயங்கர பலம் உண்டும் பார்த்துக்கோ !. அவரையும் நெனச்சிக்கோ . நான் அடிவாங்கும் போது  கூட இப்படி தான் பண்ணுவே . அடியெல்லாம் சும்மா பஞ்சி மாறி இருக்கும் " என்றான் அனுமான்.

நான் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாய் நம்பத் தொடங்கினேன். மந்திரமும் ஒருவாறு மனதில் நின்று கொண்டது .

"சொல்லிபார்க்கும் போதே ஒரு பவர் வருமே மக்கா ?" என்று வினவினான்.

 "ஆமா அது மாதிரி தான் இருக்கு " என்றேன் .

" இத யார்கிட்டயும் சொல்லாத மக்கா . "சொல்லமாட்டேன்னு" அம்மா மேல சத்தியம் போடு " என்று கூறி தனது கையை என்னிடம் நீட்டினான்.
நான் சத்தியம் செய்யபோகும் போது நீட்டிய கையை மீண்டும் உள் இழுத்து கொண்டு "நீ சொல்ல மாட்ட எனக்கு தெரியும் " என்று சிரித்தான்.
அடியின் வலி குறைத்திருந்தது. நான் அவனை நோக்கி புன்னகைத்தேன். அன்று ஆரம்பித்த நட்பு.

ஊரெல்லாம் ஒன்றாய் அலைந்து திரிந்தோம். அவன் காட்டிய உலகு அதுவரை நான் கண்டிராதது.

    அதிகாலை புல்வெளியில் ஓட்டம், பின்னர் கிணற்றில் குளியல் , மதிய வேளையில் போஞ்சி மிளகாய் தூவிய மாங்காய் , புளிச்சங்காய், மாலையில் சூப்பும், இரத்த பொரியலும் சிலநேரங்களில் சுக்குபாலும், பொறித்த கடலை மற்றும் வத்தல் என்று ஏதேதோ அறிமுகப்படுத்தின்னான்.

   அவற்றிக்கெல்லாம் அவனே காசு கொடுப்பது  வழக்கம். அவன் கைகளில் எவ்வாறு காசு புரள்கிறது என்று என்றுமே நான் எண்ணியதில்லை . அவன் ஒன்றும் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தவன் அல்லன் . அவனது தாய் வீடுகளில் பத்து பாத்திரங்கள் சுத்தம் செய்து , அதன் மூலம் பெற்ற வருமானத்தைக் கொண்டு யாருடைய துணையுமின்றி வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார்.

அனுமான் பள்ளியைக் காட்டிலும் வெளியே துடிப்புடனும், துணிவுடனும் திரிந்தான் . மதிய வேளைகளில் உணவு உண்ணும் போது  அவனுடனே உண்ணுதல்  வழக்கமானது.  

தினமும் அவனது தாய் சுடச்சுட சோறும் , மீன் குழம்பும் , தயிரும் சிலநேரங்களில் பொறித்த மீனும் கொண்டு வருவார் . எனது உணவு கூடையை ஒதுக்கி வைத்துவிட்டு என்னையும் அருகில் அமர வைத்து உணவு உண்ணச் செய்வார். சோற்றில் எண்ணெய் கறுத்த மிதக்கும் மீன் குழம்பினை ஊற்றி நன்றாக விரவிசிறு உருண்டையாய் மாற்றி அதன் மேலே  சிறு துண்டு பொறித்த மீனை வைத்து அன்புடன் ஊட்டுவார். அதன் சுவை இன்னும் எனது நாக்கின் நாளங்களில் நிலை பெற்றிருக்கிறது.

             ஒரு நாள் பள்ளியில் ரூ 7 மதிப்புள்ள ஆங்கில அகராதி வழங்க இருப்பதாகவும், அதற்கான காசினை அனைவரும் அடுத்த 2-3 நாட்களில் கொண்டு வர வேண்டும் என அறிவிக்க , அகராதியும் அனைவருக்கும் வழங்கப்பட்டது .
            மறுநாள் காலை வருகைப்பதிவேட்டை சரி பார்த்து முடிந்ததும் வகுப்பாசிரியை மாணவர்களை நோக்கி "லேய் ! எல்லாரும் இங்க பாருங்க . இங்க நம்ம சந்தோசுக்க டிக்சனரிய நேத்து காணமாம். யாருடே எடுத்தா ?" என்று கேட்டார். ஒரே நிசப்தம்.

"இப்போ சொல்லலேன HM ரூமுக்கு கூட்டிட்டு போய் TC வாங்கி குடுத்துருவேன் பாத்துகிடுங்க "  என்றார் .

"சந்தோஷ் இங்க வாடே நேத்து சாந்தரம் டிக்சனரி இருந்தா டே உங்கிட்ட ?" என்றார்.

"ஆமா மிஸ் லாஸ்ட் பீரிட் இருந்து அப்புறம் காணோம் " என்றான் சந்தோஷ் .
யாரும் எந்த பதிலும் கூறாமல் வெகுநேரம் அமைதியாய் இருக்க , நான் அனுமானைப்  பார்க்க , அனுமான் தனது வழக்கமான மந்திரங்களை ஓதிக்கொண்டிருந்தான் .

பொறுமை இழந்த வகுப்பாசிரியை "சரிடே ! எவனும் உண்மைய சொல்லுக மாதிரி தெரியல . நாளைக்கு எல்லாரும் 25 பைசா கொண்டு வரணும்.அத வச்சி சந்தோஷ்க்கு ஒரு புது டிக்சனரி வாங்கிக்கொடுத்திருவோம் " என்றொரு தீர்ப்போடு பாடத்தை ஆரம்பித்தார் .

மறுநாள் பைசா வசூல் ஆரம்பமாகியது. நான் 25 காசுடன் தயாராய் இருந்தேன். அனுமானிடம் கேட்ட போது  அவன் கொண்டுவரவில்லை என்றறிந்தேன் .

"ஏன் மக்கா கொண்டு வரல ?" என்றேன் .
"அதுவா அம்மாட்ட கேட்டே , அம்மா இதுக்கெல்லாம் குடுக்க கூடாதுன்னு சொல்லிட்டு " என்றான் .
"மிஸ் அடிக்கும்லா ?" என்றேன்.
"..............."

அதற்குள் ஆசிரியை எங்கள் இருக்கையின் அருகில் வந்துவிட்டார் .
"என்னல 25 பைசா எங்க? " என்று அனுமானிடம் கேட்க , அமைதியாய் நின்றான் அனுமான்.அவன் மனதிற்குள் மந்திரம் ஓதிக்கொண்டிருப்பான் என்பது நான் மட்டும் அறிந்த ரகசியம்.

"நாளைக்கி கொண்டு வரணும் என்னா ?" என்று மிரட்டினார் ஆசிரியை .


அடுத்தநாளும் அதே கூத்து .

"யான்டே ? 25 பைசா முட்டாய் வாங்கி திண்ணுடயா ? இல்ல உங்க வீட்ல 25 பைசாக்கு வக்கு இல்லயா ?" என்றார் ஆசிரியை .

"இல்ல மிஸ் ! எங்க அம்மா இதுக்கு எல்லாம் குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு " என்றான் பாவமாய் .

"அப்படியா அப்போ போய் வெளிய நில்லு .உங்க அம்மா என்னடே செய்யி ? "  என்றார் .

"பாத்திரம் தேய்க்க வேல மிஸ் " என்றான்.

"ஹ்ம்ம் , நாளைக்கு வரும் போது  25 பைசா கொண்டு வரணும் இல்லனே உங்க அப்பாவ கூட்டு வரணும் என்னா ? " என்றார் .
"அப்பா இல்ல மிஸ்" என்றான் அனுமான்.
"அப்போ அம்மாவ கூட்டு வா . இப்போ போய் வெளில நில்லு " என்றார்.

சரி என்பது போல் தலையாட்டி விட்டு வகுப்பறையின் வெளியே சென்றான் .
நான் ஜன்னலின் வழியே அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன் . அவனோ தூரத்தில் சிறுவர்கள் விளையாண்டு கொண்டிருப்பதை கண்டு களித்து கொண்டிருந்தான்.

மறுநாள் அனுமான் தாயுடன் வகுப்பிற்கு வந்தான் . வகுப்பாசிரியை கொஞ்சம் கோபத்துடன் பேசினார் .

"25 பைசா கேட்ட பையன் ஏதோ சொல்லுகான் " என்றார் ஆசிரியை.

"எதுக்கு 25 பைசா குடுக்கனுங்க" என்றார் அனுமானின் தாய் சாந்தமாய்  .

விஷயத்தைக் கூறியதும் "இல்ல டீச்சர் , ஒரு பையன் எதோ தொலைச்சிட்டா எல்லார்கிட்டயும் பைசா வாங்கி குடுக்கிறது சரியா இல்ல டீச்சர் . நாளைக்கு என் பையனோ இல்ல வேற எந்த பையனாவது இத மாதிரி தொலைச்சிட்டு வந்த இதே மாதிரி ஒவ்வொரு தடவையும் கொடுபீங்களா ?" என்று கேட்கஆசிரியை சற்று அமைதியானார் .

       "மத்தபடி 25 பைசவுக்கெல்லாம் வீட்ல வக்கு இல்லாம இல்ல " என்று கூறி அருகில் நின்றுகொண்டிருந்த அனுமானிடம் 1 ரூபாய் கொடுத்து "மிஸ்ட 25 பைசா குடுத்திரு அம்மா வரட்டா " என்று சொல்லிவிட்டு வேகமாய் நடந்தார் . அவரைப் பார்த்த வண்ணமே ஆசிரியை நின்று கொண்டிருந்தார்.

        "மிஸ் நான் உள்ள போகவா?" என்றான் அனுமான். "போ " என்று கையசைத்தார் ஆசிரியை . அமைதியாய் நாற்காலியில் வெகு நேரம் அமர்ந்திருந்தார் .

"நா  போய்  குடுத்துட்டு வாரேன்" என்று கூறி ஆசிரியையை நோக்கிச் சென்றான் அனுமான். "மிஸ்" என்று 1 ரூபாய் நாணயத்தை நீட்டினான்.
ஆசிரியை என்ன எண்ணினாரோ தெரியவில்லை. மாணவர்களிடம் பெற்ற 25 காசுகள் கொண்ட " டப்பா"வை எடுத்து அனைத்தையும் மாணவர்களிடம் கொடுத்து, அனுமானையும் இடத்தில போய் அமரசொல்லிவிட்டார்அன்று மாணவர்கள் அனைவரும் மாங்காயோ, சுக்குப்பாலோ வாங்கி குடித்து மகிழ்ந்திருப்பார்கள்.

அனுமானை இப்பொழுது கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து காண்கிறேன் . அனுமானைக் காணும் போதெல்லாம் அவனது அம்மாவின் நினைவு வர தவறுவதில்லை. இன்றும் அதுவே நிகழ்கிறதுஅனுமான் இப்பொழுது "அனுமார்" போலவே ஆஜானுபாகுவாய் காட்சி அளித்தான் .

"எப்படிடே இருக்க? பார்த்து நாளாச்சி " என்றான் .
"நாளா ? வருஷம் ஆச்சே டே" என்றேன்
"நீ இங்க சென்னைலயா இருக்க?" என்றான் .
"இல்ல மக்கா . நான் பெங்களூர் இருக்கேன் . இப்போ கார்த்திய பார்க்க வந்தே . உன்ன பார்த்ததுல ரொம்ப சந்தோசம் போ " என்றேன்

" எனக்கும் தான் மக்கா . நான் இங்க ஒரு கொரியர் கம்பெனில  வேல பாக்கேன் . நல்ல ஊர் சுத்துக வேல " என்று சிரித்தான்  அனுமான் .

"அம்மா எப்படி இருக்கு ?" என்றேன் .
"அம்மாக்கு கொஞ்சம் ஒடம்பு சொகமில்ல . அது தான் பாக்க  போறேன்." என்றான்.

சிறிது யோசித்தவாறு "மக்கா ! கைல கொஞ்சம் காசு கம்மிய இருக்கு , உங்ககிட்ட பைசா இருக்கா? ஒரு 200 " என்று கேட்டான் . கண்களில் அதே சிரிப்பு .

"இருக்குடே இந்தா " என்று கூறி 2 100 ரூபாய்  தாளினை அவனிடம் அளித்தேன் .
"ரொம்ப தேங்க்ஸ் டே " என்று கூறி , கொஞ்சம் அருகில் வந்து "மக்கா இன்னு ஒரு மேட்டரு , நான் உன்கிட்ட பைசா கேட்டத யார்கிட்டயும் சொல்ல மாட்டேல்லா ? " என்று கூறி சத்தியம் செய்ய வலக்கையை நீட்டினான்.

கையில் "அனுமார் சஞ்சீவிமலையுடன் " பச்சைநிறத்தில் பறந்தவண்ணம் தென்பட்டார் . அப்பொழுது என் கண்முன்னே 5ம் வகுப்பு அனுமானே தென்பட்டான் . நான் சத்தியம் செய்ய கையை கொண்டுசெல்லும் முன்னர் தனது கையினை உள்ளிழுத்து "நீ சொல்லமாட்ட எனக்கு தெரியும் " என்று வெள்ளை சிரிப்பை அள்ளிவீசினான் .

"மக்கா இங்க ஒரு கடைல சுக்காப்பி கெடைக்கும் குடிக்கலாமா ?" என்றான் .

"லே நான் இன்னும் பல்கூட தேய்க்கல " என்றேன்.

"அப்போ தானடே டேஷ்ட்டாடு இருக்கும் வாடே குடிப்போம்" என்று என்னை இழுத்துக்கொண்டு போனான் . இருவரும் கடையை நோக்கி நடந்தோம். அவனது வலக்கை எனது தோள்களில். முதற்பொய்யின் விளைவுகள் இன்னும் மீதம் இருப்பதை போல் தோன்றியது.

 



Download As PDF